நடிகை நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணத்தின் பொழுது மாமல்லபுர கடற்கரையில் பொதுமக்களை அனுமதிக்காதது குறித்த புகாரின் பேரில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் வழக்கு பதிவு செய்துள்ளது.
கடந்த 9 ஆம் தேதி, நடிகை நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் திருமணம் செய்துக் கொண்டனர். இவர்களின் திருமணம் சென்னை கிழக்கு கடற்கரை சாலை மகாபலிபுரத்தில் உள்ள ரெசார்ட்டில் நடைபெற்றது.
நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் நெருங்கிய உறவினர்கள், திரைப் பிரபலங்கள் உள்ளிட்டோர் கலந்துக் கொண்ட இத்திருமணமானது, மிகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் நடைபெற்றது. ஜூன் 11 ஆம் தேதி இவர்களின் திருமணம் குறித்து பேச செய்தியாளர் சந்திப்பும் நிகழ்ந்தது.
திருமணம் முடிந்து ஒருவார காலம் ஆனப் பிறகும், இவர்களின் திருமணம் குறித்து இன்றளவும் சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டு வருகிறது. நயன்தாராவும் விக்னேஷ் சிவனும், திருமணம் முடிந்த கையோடு மறுநாளே திருப்பதி சென்று வந்தனர்.
பிறகு, நயன்தாரா புகுந்த வீட்டுக்கு விருந்துக்கு சென்று வந்தார். மேலும் தனது பிறந்து வீடான கேரளாவிற்கும் சென்று தாயிடம் ஆசிர்வாதம் பெற்றுள்ளார். கேரளாவில் நேற்று கோவிலுக்கு சென்ற புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் சுற்றி வந்தது. இதனிடையே அவர்களின் திருமணத்தில் புகார் ஒன்று எழுந்துள்ளது.
இவர்களின் திருமணத்தின் போது ரெசார்ட்டில் இடம்பெற்றிருந்த கடற்கரை பகுதியில் பொதுமக்கள் அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில் கடற்கரை பொது இடம்தான், அங்கு ஏன் பொது மக்களை அனுமதிக்கவில்லை? என்று சமூக ஆர்வலர் சரவணன் என்பவர் தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். இந்தப் புகாரை ஏற்ற மனித உரிமைகள் ஆணையம், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துவதாக தெரிவித்துள்ளது.
கொரோனாவை விரட்ட உதவுமா சர்ஜிக்கல் மாஸ்க்? என்ன சொல்கிறது ஆராய்ச்சி நிறுவனம்!