திருவள்ளூர் ரயில் நிலையத்தில் 600 கிலோ ரேஷன் அரிசியை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
திருவள்ளூர் ரயில் நிலையத்திலிருந்து ஆந்திர மாநிலத்துக்கு ரேஷன் அரிசி திருட்டுத்தனமாக கடத்தப்படுவதாக திருவள்ளூர் ரயில்வே காவல்துறையினருக்கு தொடர்ந்து புகார்கள் கொடுக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து, நேற்று (ஆகஸ்ட் 25) ரயில்வே பாதுகாப்பு படை உதவி ஆணையர் ஏ.கே. பிரித் உத்தரவின் பேரில், ரயில்வே பாதுகாப்பு படை காவல் கண்காணிப்பாளர் செபாஸ்டின் மற்றும் காவல்துறையினர் திருவள்ளூர் ரயில் நிலையத்தில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, ஒரு கும்பல் 23 மூட்டை ரேஷன் அரிசியுடன் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்தது. மேலும், காவல்துறையை கண்ட அந்தக் கும்பல் தப்பி ஓடியது. இதைத்தொடர்ந்து, காவல்துறையினர் அங்கு 23 மூட்டையில் இருந்த 600 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.
மேலும், இதுகுறித்து திருவள்ளூர் ரயில்வே பாதுகாப்பு படை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டு தப்பி ஓடிய மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
பறிமுதல் செய்த ரேஷன் அரிசி மூட்டைகளை காவல்துறையினர் திருவள்ளூரில் உள்ள நுகர்பொருள் வாணிப கிடங்களில் ஒப்படைத்தனர்.