Wednesday, May 8, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுகள்ளக்குறிச்சி பள்ளிக்கு எதிராக 17 ஆண்டுகளுக்கு முன் போராட்டம்

    கள்ளக்குறிச்சி பள்ளிக்கு எதிராக 17 ஆண்டுகளுக்கு முன் போராட்டம்

    கள்ளக்குறிச்சி சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரம் தமிழக மக்களை பரபரப்பில் ஆழ்த்தியுள்ள நிலையில், அப்பள்ளிக்கு எதிராக 17 ஆண்டுகளுக்கு முன் நடந்த போராட்டம் குறித்து தற்போது இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்த மாணவி ஶ்ரீமதி, கடந்த 13-ம் தேதி பள்ளி வளாகத்தில் மர்மமான முறையில் இறந்ததாக கூறப்படுகிறது.  இந்நிலையில் இந்தச் சம்பவம் தொடர்பாக, நான்கு நாள்களாக மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டம் நடத்தி வந்த நிலையில், கடந்த ஜூலை 17ம் தேதி போராட்டம் வன்முறையாக உருவானது. 

    இந்நிலையில், மாணவி ஶ்ரீமதி பயின்ற பள்ளிக்கு எதிராக 2005-ம் ஆண்டு டிசம்பர் 29ம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில், சின்னசேலம் பேருந்து நிலையம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்துள்ளது.

    இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம் சார்ந்த துண்டறிக்கை (நோட்டீஸ்) இப்போது சமூக  வலைதளங்களில் அதிமகமாக பகிரப்பட்டு வருகிறது. 

    விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் கனியாமூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கடந்த சில வருடங்களாக மர்ம கொலைகளும் சீர்கேடான செயல்களும் அரங்கேறி வருகிறது. இதனால் ஏழை- எளிய குழந்தைகளின் எதிர்காலக் கனவை, குழிதோண்டி புதைக்கும் நிர்வாகத்தின் மிகுந்த அலட்சியமும் அநியாயங்களும் தலைவிரித்தாடுவதை அளவிட முடியாது என்று அந்த அறிவிக்கையின் தொடக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

    மேலும், அந்த அறிவிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது :

    நெஞ்சை பிளக்கும் வகையில் பிஞ்சு உள்ளங்களில் நஞ்சை பாய்ச்சி வருவதோடு மாணவர்களை நாள்தோறும் சொல்லொன்னா துயரங்களுக்கு ஆளாக்கி மனிதாபிமானமற்ற முறையில் பாடசாலையை கொலைக்களமாக்கி வருகின்றனர்.

    வியாபார நோக்கில் செயல்படும் இப்பள்ளி மாணவ – மாணவிகள் கல்விக் கட்டணத்தை காலதாமதமாக கட்டினால் அம்மாணவர்களை கடுமையாக வெயிலிலும், மழையிலும் முட்டிபோட வைத்து துன்புறுத்துதல், அறைக்குள் பூட்டி வைத்து கல்வியாளர்களை கைதிகளாக தண்டித்தல் போன்றவை நிகழ்வது வாடிக்கையாகும். 

    மேலும், விடுதியில் தங்கிப்படிக்கக் கட்டாயப்படுத்துவது, பாதுகாப்பற்ற முறையில் மண் தரையில் உணவு கொடுத்து உட்கார வைப்பது, அரசின் விதிமுறைகளை மீறி நிர்ணயிக்கப்பட்ட கல்விக் கட்டணத்தைவிட பல மடங்கு சேர்த்து வசூலிப்பது, மேலும் பல வடிவங்களில் கல்விக்கு சம்மந்தமில்லாத பல்வேறு காரணங்களுக்கு கட்டணம் மிரட்டி வசூலிப்பதோடு நிர்வாகம் சார்ந்த பணிகளை மேற்கொள்ள மாணவர்களை சட்டத்திற்கு எதிராக நிர்பந்திப்பது, இந்தக் கொடுமைகளை எதிர்த்து மாற்றுச்சான்றிதழ் கேட்போரை வீணாக அலையவைத்து அவமதிப்பதும் அபராதம் விதித்து அதனை வசூலிப்பதும் இந்த தனியார் பள்ளியின் வாடிக்கையாகும். 

    இதுபோன்ற நிர்வாகச் சீர்கேடுகள், முறைகள் ஒழுக்கக்குறைவான நிகழ்வுகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரிகள் முறையாக, இப்பள்ளியின் பிரச்னைகளை எள்ளளவும் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவதால் மதிப்பற்ற மாணவர்களின் உயிர்களை பலி கொடுப்பதற்கு அதிகாரிகளே துணையாக இருக்கின்றனர்.

    அதிகாரிகளின் இந்தப் போக்குதான் 2003ல் ஜனவரியில் பள்ளி பேருந்து அம்மகளத்தூர் மாணவர்களை ஏற்றிச்சென்று மோதிய விபத்தில் பல மாணவர்கள் பலத்த காயமடைந்து நினைவிழக்கச் செய்தது. 2004ல் ஜூன் மாதம் 7 ஆம் வகுப்பு படித்த பள்ளி மாணவன் ஆர். ராஜாவை படுகொலை செய்தது. 16.7.2004ல் கும்பகோணம் விபத்துக்குப் பிறகு, சுவர் இடிந்து விழுந்து பல மாணவர்களின் கால்களை ஊனமாக்கியது. 2004ல் ஜூலையில் 7 ஆம் வகுப்பு மாணவன் ராஜா ஆசிரியையின் துன்புறுத்தலால் மனமுடைந்து பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். லட்சக்கணக்கில் செலவு செய்தும் வாய் பேச முடியாததால் மனநிலை பாதித்தார்.

    தற்போது 08.12.2005 அன்று நெஞ்சை உலுக்கும் வகையில் பள்ளி வளாகத்திலேயே எல்.கே.ஜி. படிக்கும் எஸ். பிரதிக்ஷா என்ற 4 வயது சிறுமியை வாகனத்தை விட்டு ஏற்றி, விபத்து என்ற பெயரில் ரத்த காவு கொடுத்தது. இப்படி கசப்பான சம்பவங்கள் பல நடந்தும் ஐ.எம்.எஸ். வாய் திறக்காததால் இதயமே இல்லாத பள்ளி நிர்வாகம் மாநிலத்தில் முதல் இடம் பெற வேண்டி நடைபெற்ற யாக பூஜையின் பலனாய் மாணவர்களை நரபலி தரவேண்டி சாமியார்கள் எத்தணித்துக் கூறும் மூடநம்பிக்கையைதான் இப்படி நிறைவேற்றி வருகிறது என்று பொதுமக்கள் பலரும் கருத்து தெரிவிக்கின்றனர்.

    நேற்று ராஜா! இன்று பிரதிக்ஷா! நாளை யாரோ? எனத் தெரியவில்லை. இப்படி கொலை வெறிச் சிந்தனையும் மூட நம்பிக்கையால் காவு வாங்கும் கொலைக்களமாகவும் அரசின் விதிமுறைகளை மீறியுள்ள இப்பள்ளியின் அங்கீகாரத்தை உடனே ரத்து செய்யக்கோரி நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அணி திரள்வீர்!

    இவ்வாறு அந்த துண்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

    இதனிடையே, கடந்த ஜூலை 13-ம் தேதி உயிரிழந்த மாணவி ஶ்ரீமதியின் உடற்கூராய்வு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடத்தப்பட்டது. இந்த உடற்கூராய்வு அறிக்கை கடந்த ஜூலை 17-ம் தேதி வெளிவந்தது. அந்த அறிக்கையில், மாணவி ஶ்ரீமதி இறப்பதற்கு முன் அவரது உடலில் காயங்கள் மற்றும் மாணவியின் உடைகளில் ரத்த கறைகள் இருந்தது தெரியவந்துள்ளது.

    மேலும், மாணவி ஶ்ரீமதியின் உடலில் பல இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளது. காயங்களால் ஏற்பட்ட அதிர்ச்சியினாலும் மற்றும் இரத்தம் உறைந்ததாலும் அவர் உயிரிழந்திருக்கலாம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், முக்கிய தரவுகளுக்காக உடலின் பிற உறுப்புகள் ரசாயன ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என உடற்கூராய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    இதையடுத்து, கள்ளக்குறிச்சி பள்ளியில் உயிரிழந்த மாணவி ஶ்ரீமதியின் தந்தை சென்னை உயர்தநீதிமன்றத்தில் மாணவியின் உடலை மறுகூராய்வு செய்வதற்கான அனுமதி கோரி தொடர்ந்த மனு கடந்த 18-ம் தேதி நீதிபதி சதீஷ்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

    சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார் தெரிவித்துள்ளதாவது:

    இந்த போராட்டத்துக்கு அனுமதி அளித்தது யார்? வன்முறையில் ஈடுபட்டது யார்? பள்ளி வன்முறையின் பின்னணி என்ன? வன்முறையை தூண்டிவிட்டது யார்? வன்முறை தொடர்பாக உளவுத்துறை எடுத்த நடவடிக்கை என்ன?  சட்டத்தை மக்கள் கையில் எடுத்துக்கொண்டால் நீதிமன்றம் எதற்கு? நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துவிட்டு போராட்டத்தில் ஈடுபட்டது ஏன்? என நீதிபதி சதீஷ்குமார் பல்வேறு கேள்விகளை எழுப்பினார்.

    பள்ளியில் நடந்த வன்முறை திடீர் கோபத்தில் உருவானது அல்ல. திட்டமிட்ட செயல். வன்முறையில் ஈடுபட்டோரை காணொளி காட்சி மூலம் அடையாளம் கண்டு டிஜிபி நடவடிக்கை எடுக்க வேண்டும்.  பள்ளியில் வன்முறையில் ஈடுபட்டோரை தனிப்படை அமைத்து அடையாளம் காண வேண்டும். வன்முறையாளர்களை கண்டறிந்து பள்ளியில் ஏற்பட்ட இழப்பை அவர்களிடம் இருந்தே வசூலிக்க வேண்டும்.

    மேலும், தனியார் பள்ளியில் டிராக்டரை கொண்டு பஸ்சை மோதிய சம்பவமே ஒட்டுமொத்த வன்முறைக்கும் காரணம். மாணவி இறுதிச்சடங்கு அமைதியாக நடக்க வேண்டும். மேலும், மாணவியின் உடலை மறு கூராய்வுக்கு உள்படுத்த வேண்டும்.

    இவ்வாறு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார் தெரிவித்துள்ளார்.

    உளவுத்துறை எச்சரிக்கையை அலட்சியப்படுத்திய காவல்துறை

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....