வட கிழக்கு ரயில்வே மஸ்தூர் யூனியன் சங்க தேர்தலில் கண்ணையா லால் குப்தா 61-வது முறையாக வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.
கண்ணையா என்ற பெயர் தற்போது இந்தியாவின் பல பகுதி மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது. உத்தர பிரதேசத்தின் கோரக்பூரை சேர்ந்தவர் கண்ணையா லால் குப்தா. இவர் ராணுவத்தில் 10 ஆண்டுகள் பணியாற்றினார்.
அதன்பின்பு, வடக்கு ரயில்வே பணியில் கண்ணையா லால் குப்தா சேர்ந்தார். சிறப்பாக பணி செய்து வந்தவர் கடந்த 1946-ம் ஆண்டில் வடக்கு ரயில்வேவின் மஸ்தூர் யூனியன் சங்க பொதுச் செயலாளராக முதல் முறையாக தேர்வு செய்யப்பட்டார்.
சங்க பொதுச் செயலாளராக தேர்வானப் பின்பு மஸ்தூர் யூனியன் தனது பணிகளில் தீவிர கவனம் செலுத்தினார். இதையடுத்து, கடந்த 1981-ம் ஆண்டில் ரயில்வே பணியில் இருந்து கண்ணையா ஓய்வு பெற்றார். இருப்பினும், மஸ்தூர் யூனியனை விட்டு அவர் விலகவில்லை.
1946-ம் ஆண்டில் இருந்து நடைபெற்ற தேர்தல்களில் இவர் மஸ்தூர் யூனியன் சங்க பொதுச் செயலாளராக தொடர்ந்து தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில், அண்மையில் நடைபெற்ற வடகிழக்கு ரயில்வே மஸ்தூர் யூனியன் சங்க தேர்தலில் கண்ணையா லால் குப்தா 61-வது முறையாக வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.
தற்போது கண்ணையா லால் குப்தாவிற்கு 106 வயதாகிறது. 61-வது முறையாக அவர் வெற்றி பெற்ற சாதனையை கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.