இந்திய அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, இருபது ஓவர் தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து அணி.
இந்திய மகளிர் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இந்த சுற்றுப்பயணத்தில் இந்திய அணி 3 ஒருநாள் மற்றும் 3 இருபது ஓவர் போட்டிகளில் விளையாடி வருகிறது.
இதில் முதல் இருபது ஓவர் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது இருபது ஓவர் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் மூன்றாவது இருபது ஓவர் போட்டி நேற்று(செப்டம்பர்-15) நடைபெற்றது.
இப்போட்டியில் முதலில் இங்கிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி, இந்திய அணி முதலில் களமிறங்கியது. ஆனால், இந்திய அணி இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.
மொத்தத்தில், இந்திய மகளிர் அணி, 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 122 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதைத்தொடர்ந்து, 123 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் களமிறங்கியது இங்கிலாந்து அணி.
இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணியின் பந்துவீச்சு எடுபடவில்லை. 18.2 ஓவர்களுக்கே இங்கிலாந்து அணி 126 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது. 3 விக்கெட்டுகளை இழந்த இங்கிலாந்து அணியின் பந்துவீச்சாளர் சோஃபி எக்லஸ்டோனுக்கு ஆட்டநாயகி விருது வழங்கப்பட்டது. மேலும், தொடர்நாயகி விருது சோஃபியா டங்க்லிக்கு வழங்கப்பட்டது.
இங்கிலாந்து அணி, இந்த வெற்றியின் மூலம் இருபது ஓவர் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.