”ப்ரீ பையர்” விவகாரம் தொடர்பாக போடப்பட்ட ஆட்கொணர்வு மனுவை ஏற்றுக்கொண்ட, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை, அது தொடர்பாக தமிழக சைபர் கிரைம் போலீசாருக்கு கடுமையான உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் நகரத்தை சேர்ந்த ஐரீன் அமுதா என்பவர் ”ப்ரீ பையர்” விவகாரம் குறித்து ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது,
தனது மகளின் பெயர் இதாஸ் செலானி வில்சன். நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துவருகிறார். மேலும் தனது மகள் ஆன்லைன் விளையாட்டான “பிரீ பையர்” தொடர்ந்து விளையாடுவார். அதன் விளைவாக கன்னியாகுமரி மாவட்டம் சவேரியார்புரம் பகுதியை சேர்ந்த ஜெப்ரின் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் ஜெப்ரின் போதை பொருட்களுக்கு அடிமையாய் இருப்பதாகவும். அவர் தனது மகளை கடத்தி சென்றிருக்கலாம் என்றும் எனவே தனது மகளை மீட்டு தருமாறு தனது மனுவில் கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்திய நாராயண பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆன்லைன் “பிரீ பையர்” விளையாட்டு முற்றிலும் தடை செய்யப்பட்ட ஒன்று. அதனை இளைஞர்கள் எவ்வாறு பயன்படுத்த முடிகிறது. இந்த விவகாரத்தில் தமிழக சைபர் கிரைம் போலீசார் என்னதான் செய்துகொண்டு இருக்கிறார்கள். என்று சரமாரியாக கேள்வி எழுப்பினார்கள்.
மேலும் தகுந்த நடவடிக்கை எடுக்க தமிழக சைபர் கிரைம் போலீசாருக்கு உத்தரவிட்ட நீதிமன்றம் வழக்கை 19 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. அன்றைய தினம் விரிவான உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் தெரிவித்தது.