பாகிஸ்தான் மசூதி தற்கொலைப்படை தாக்குதலில் 100 பேர் உயிரிழந்த நிலையில், பயங்கரவாதத்தின் விதைகளை தாங்கள் தான் விதைத்தாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான், கைபர் பக்துங்வா மாகாணத்தின் தலைநகர் பெஷாவரில் காவலர் குடியிருப்பு போன்ற உயர் பாதுகாப்பு நிறைந்த பகுதியில் மசூதி ஒன்று இருந்தது.
இந்நிலையில், அங்கே நேற்று முன்தினம் மதியம் தொழுகை நடைபெற்றது. இதில் காவலர்கள் உள்பட பலரும் கலந்து கொண்டு தொழுகை செய்தனர். அப்போது, பயங்காரவாத அமைப்பைச் சேர்ந்த ஒருவர் தனது உடலில் கட்டிக்கொண்டு வந்திருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தார். இதன் காரணமாக, மசூதியின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் பலர் உயிரிழந்தனர்.
இந்தத் தற்கொலைபடைத் தாக்குதலில் 100 பேர் உயிரிழந்தனர். மேலும் 170 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், இந்தச் சம்பவம் குறித்து நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா பேசினார். அப்போது அவர், தான் நீண்ட நேரம் பேசப்போவதில்லை என்று கூறி உரையை தொடங்கினார். தொடக்கத்தில் இருந்து தாங்கள் தான் பயங்கரவாதத்திற்கான விதைகளை விதைத்ததாக வேதனை தெரிவித்தார்.
இந்தத் தற்கொலை குண்டுவெடிப்பை நிகழ்த்திய நபர், இறைவணக்கத்தின்போது தொழுகை நடைபெறும் பகுதியில் முன்னால் நின்று கொண்டிருந்ததாகவும், இந்தியா அல்லது இஸ்ரேல் நாடுகளில் கூட இறைவனை வழிபடும்போது யாரும் கொள்ளப்படுவதில்லை என்றும் ஆனால், அது பாகிஸ்தானில் நடந்திருப்பதாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், ஒட்டுமொத்த நாடும் பயங்கரவாதத்திற்கு எதிராக ஒன்றிணைய வேண்டிய தேவை இருப்பதாகவும், அதன் பிறகே அதற்கு எதிராக போராட முடியும் என்றும் கூறினார்.
எந்தவொரு மதம் அல்லது வகுப்பினருக்கு இடையே பயங்கரவாதம், வேற்றுமைப்படுத்துவது இல்லை என்று கூறிய அமைச்சர் கவாஜா, விலைமதிப்பற்ற உயிர்களை பலி கொள்ள மதத்தின் பெயரால் பயங்கரவாதம் பயன்படுத்தப்படுவதாக வேதனைப்பட தெரிவித்தார்.
‘பணத்தை எடுக்க வரவில்லை… நான் உங்கள் விருந்தாளி’ – கடிதம் எழுதிய திருடன்!