நடிகர் விஜய் படப்பிடிப்பு தளத்தில் ரசிகர்களை சந்தித்த காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்திய நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் விஜய். இவருக்கென்று பெரும் ரசிக பட்டாளமே இருக்கிறது. தற்போது இவர் ‘வாரிசு’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தை இயக்குநர் வம்சி இயக்குகிறார். தில் ராஜூ தயாரிக்கிறார்.
வாரிசு திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு என்பது நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டே போகிறது. எப்படியாவது பொங்கலுக்கு திரைப்படத்தை ரிலீஸ் செய்துவிட வேண்டும் என்ற முனைப்புடன் படக்குழு விறுவிறுப்பாக படப்பிடிப்புகளை நிகழ்த்தி வருகிறது.
கடந்த செப்டம்பர் 25-ம் தேதி வாரிசு திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியது. இந்த படப்பிடிப்பில் இரண்டு சண்டைக்காட்சிகள் மற்றும் இரண்டு பாடல்காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், சென்னை எண்ணூர் பகுதியில் படப்படிப்பு நடைபெறுகிறது என்பதை ரசிகர்கள் கேள்விப்பட்டு உடனடியாக நேற்று அங்கு குவிந்தனர் . அப்போது, படப்படிப்பு தளத்தில் இருந்து வந்து ரசிகர்களைப் பார்த்து கையசைத்துவிட்டு சென்றார், விஜய். இது தொடர்பான காணொலிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளன.
Mass euphoria at #Varisu shooting spot #Thalapathy @actorvijay pic.twitter.com/mRpTIua9oh
— Rajasekar (@sekartweets) September 27, 2022
வாரிசு திரைப்படத்தில், பிரபு, பிரகாஷ் ராஜ், ஷியாம், சரத்குமார், சம்யுக்தா, குஷ்பு, யோகிபாபு என பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்துவருகிறது. மேலும், விஜய்க்கு ஜோடியாக இத்திரைப்படத்தில் ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். தமன் இத்திரைப்படத்திற்கு இசையமைத்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : ‘தயவுசெய்து என்னைப் பார்த்துவிடு’ – சமந்தாவிடம் கெஞ்சும் அந்த காதல்… வரிகளில் வித்தை செய்த மதன் கார்க்கி!