சட்டமன்ற உறுப்பினரான உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவி ஏற்கும் விழாவில் பங்கேற்க எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தற்போது சென்னை, சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.
இந்நிலையில் அமைச்சரவையில் உதயநிதி ஸ்டாலினை இணைத்துக்கொள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது பரிந்துரை கடிதத்தை ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அனுப்பினார். இதனை ஏற்றுக்கொண்ட ஆளுநர், நாளை 9.30 மணி அளவில் ஆளுநர் மாளிகையில் உதயநிதி ஸ்டாலினுக்கு பதிவிப் பிரமாணம் செய்து வைக்க உள்ளார்.
இந்தப் பதவியேற்பு விழாவில் பங்கேற்க எதிர்கட்சித் தலைவரும் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமிக்கு அரசு தரப்பில் இருந்து அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அதே சமயம், திமுகவின் கூட்டணிக் கட்சிகள் மற்றும் பிற கட்சித் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவி ஏற்பதன் மூலம் தமிழக அமைச்சர்களின் எண்ணிக்கை 34 ஆக அதிகரிக்கக் கூடும்.
தமிழக அமைச்சரவையில் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மதிவேந்தன் ஆகியோர் 45 வயதுக்குட்பட்ட அமைச்சர்களாக உள்ள நிலையில், தற்போது அந்த வரிசையில் உதயநிதி ஸ்டாலினும் இணைய உள்ளார்.