கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த வழக்கில் 2 ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படித்த மாணவிதான் ஸ்ரீமதி. இவர் கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகில் உள்ள பெரியநெசல்லூர் கிராமத்தைச் சேர்ந்த ராமலிங்கத்தின் மகள். இவர் கடந்த 13-ம் தேதி பள்ளி வளாகத்தில் மர்மமான முறையில் இறந்ததாக கூறப்படுகிறது.
பள்ளித்தரப்பில், மாணவி ஸ்ரீமதி தற்கொலை செய்துகொண்டார் என தெரிவிக்கப்பட்டது. ஆனால், உயிரிழந்த மாணவி ஸ்ரீமதியின் தாயார், தமது மகள் தற்கொலை செய்துகொள்ளவில்லை. கொலைசெய்யப்பட்டிருக்கலாம் என்று காணொளி ஒன்றில் தெரிவித்தார். மேலும், உயிரிழந்த மாணவி ஸ்ரீமதி பெற்றோர் சார்பில் காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து காவல்துறை சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இறந்த மகளின் உடலை வாங்காமல் தொடர்ந்து பெற்றோர்கள் மற்றும் மாணவியின் உறவினர்கள் பள்ளி வளாகத்தில் நான்கு நாள்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்தப் போராட்டமானது கடந்த ஞாயிற்றுக்கிழமை வன்முறையாக உருமாறியது. இக்கலவரத்தில் உயிரிழந்த மாணவி ஸ்ரீமதி படித்த பள்ளியின் வாகனங்களும் தீக்கிரையாக்கப்பட்டது. தொடர்ந்து பள்ளிக்குள் நுழைந்த வன்முறையாளர்கள் அங்கிருந்த கணினிகள், நாற்காலிகள், ஆவணங்களுக்கு தீ வைத்தனர். கடந்த ஞாயிறு பிற்பகல் 3:30 மணியளவில் இந்த தனியார் பள்ளியை காவல்துறையினர் தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்நிலையில், மாணவி ஸ்ரீமதி படித்த சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் வேதியியல் ஆசிரியை மற்றும் கணித ஆசிரியை ஆகியோர் நேற்று காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். மாணவியின் மரணம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள ஆசிரியர்கள் மாணவியை திட்டியதாக கூறப்படுகிறது. மாணவியின் தாயார் காவல்துறையினரிடம் அளித்த புகாரின் அடிப்படையில் இரண்டு ஆசிரியர்களும் கைதுசெய்யப்பட்டனர்.
இதற்கு முன்னதாக மாணவி உயிரிழந்த வழக்கில், அந்தப் பள்ளியின் தாளாளர், செயலாளர் மற்றும் பள்ளி முதல்வர் ஆகியோர் நேற்று கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கள்ளக்குறிச்சி வன்முறையில் ஈடுபட்ட பலர் மீது வழக்குப்பதிவு