கடந்த சில நாட்களாக குறைந்திருந்த தக்காளியின் விலை திடீரென அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் பொதுமக்கள் தக்காளி வாங்குவதற்கு சிரமப்பட்டு வருகின்றனர்.
இரண்டு வாரங்களுக்கு முன்னர் தக்காளியின் விலையானது விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்திருந்தது. உற்பத்தி பாதிப்பு, தமிழகத்திற்கு தக்காளி வரத்து குறைவு போன்ற பல காரணங்களால் தக்காளியின் விலையானது இந்த அளவிற்கு உயர்ந்திருந்தது.
ஒரு கிலோ 120 ரூபாய் என்கிற அளவிற்கு உயர்ந்திருந்த தக்காளியின் விலையானது கடந்த இரண்டு நாட்களாகவே குறையத் தொடங்கி இருந்தது. கோயம்பேடு சந்தையினைப் பொறுத்த வரை ஒரு கிலோ தக்காளி 50 முதல் 55 ரூபாய் வரை விற்பனையானது.
இந்நிலையில், இன்று தக்காளியின் விலை மீண்டும் உயரத்தொடங்கியுள்ளது. கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளியானது 15 முதல் 20 ரூபாய் வரை அதிகரித்து 70 ரூபாயாக விற்றுக் கொண்டிருக்கிறது.
இங்கு தக்காளியினை வாங்கிச் செல்லும் சில்லறை வர்த்தகர்களும் வேறு வழியின்றி விலையினை உயர்த்தத் தொடங்கியுள்ளனர். இதன்படி, சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிலோ தக்காளி 100 ரூபாய் வரை விற்கப்படுகிறது.
நாமக்கல் பகுதிகளில் ஒரு கிலோ தக்காளி 120 வரை விற்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. தமிழகத்தின் அண்டை மாநிலங்களிலிருந்து வர வேண்டிய தக்காளியின் வரத்து குறைந்தது தான் இந்த விலை உயர்வுக்கு காரணம் என்கின்றனர் வர்த்தகர்கள்.
தக்காளியினைத் திருடிய ஆப்பிள் திருடன்..!
இந்நிலையில், சேலம் மாவட்டம் இளம்பிள்ளை பகுதியில் அறுபது கிலோ எடையுள்ள தக்காளி பெட்டி ஒன்று திருடப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இதனை சிசிடிவி காட்சியில் கண்டறிந்த கடை முதலாளி சங்கர், அருகிலுள்ள காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். இதன்படி, வழக்குப் பதிவு செய்த போலீசார் சிசிடிவி காட்சிகளை வைத்து தங்களது விசாணையினைத் தொடங்கியுள்ளனர்.
அந்தக் காட்சிகளில் ஒரு மர்ம நபர் தக்காளிப் பெட்டியினை திருடிச் சென்றுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. வண்டியின் நம்பரினை வைத்து தேடியதில், வெண்ணந்தூர் நகரினை சேர்ந்த 32 வயதான சின்ராஜ் என்பது தெரிய வந்தது.
அவரைக் கைது செய்து விசாரித்ததில், தான் திருடியதை ஒப்புக்கொண்டுள்ளார். இவர் இதற்கு முன்னர் ஆப்பிள் பெட்டியினைத் திருடிய வழக்கில் ஜாமினில் வெளிவந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சிவகார்த்திகேயனின் அடுத்தப்பட அப்டேட் இதோ! ரசிகர்களுக்கு குதூகலம்தான்!