பிரம்மோற்சவ நாளான அக்டோபர் 1 ஆம் தேதி திருப்பதியில் 5 லட்சம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
திருப்பதி ஏழுமலையான் வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த 27 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து பெரிய சேஷம், சின்ன சேஷம், அன்னம், சிம்ம வாகனத்தில் சுவாமி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
மூன்றாவது நாளான நேற்று இரவு முத்து பந்தல் வாகனத்தில் மலையப்ப சுவாமி தாயார்களுடன் பக்தர்களின் கோவிந்தா கோஷங்களுக்கு இடையே நான்கு மாடவீதியில் வலம் வந்தார். முத்து எப்படி பரிசுத்தமானதோ அதைப் போல, நம் மனதில் உள்ள தீய எண்ணங்கள் இல்லாமல், பரிசுத்தமாக இறைவனை அடைய வணங்கினால் முக்தி பெறலாம் என்பதே இந்த வாகனத்தின் விளக்கமாகும்.
இந்நிலையில் பிரம்மோற்சவ நாளான அக்டோபர் 1 ஆம் தேதி திருப்பதியில் 5 லட்சம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
இது குறித்து பேசிய திருப்பதி தேவஸ்தான தலைமை பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு அதிகாரி நரசிம்ம கிஷோர், ‘12 ஆயிரம் வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும். கூடுதலாக வாகனங்கள் வந்தால், மலையடிவாரத்திலேயே நிறுத்தி வைக்கப்படும். அதேபோல் 5 லட்சத்திற்கும் அதிகமானோர் வந்தால், அப்போது முடிவு மாற்றியமைக்கப்படும்’ என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பொன்னியின் செல்வன் திரைப்படத்தை ரசிகர்களோடு கண்டுகளித்த நடிகர்கள்… குதூகலத்தில் ரசிகர்கள்!