சென்னை: வட தமிழக மற்றும் தென் தமிழகம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இன்று நண்பகல் 12.30 மணிக்கு சென்னை வானிலை மையம் வெளியிட்ட தகவலின்படி, ஆந்திர கடலோரப் பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, அடுத்த 48 மணி நேரத்துக்கு வட தமிழக மாவட்டங்கள் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களிலும், தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையை பொருத்தவரை: அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக் கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் கோயம்புத்தூர் மாவட்டம் சின்ன கல்லார் பகுதியில் 7 சென்டிமீட்டர் அளவு மழை பதிவாகியுள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
அடுத்த 24 மணி நேரத்துக்கு மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக கடலோர பகுதிகளில், பலத்த காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
வடக்கு கேரள கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகள் தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில், சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
கர்நாடக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபி கடல் பகுதிகள் மற்றும் ஆந்திர கடலோர பகுதிகள் மற்றும் மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில், சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இவ்வாறு, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: அடுத்த 2 மாதங்களுக்கு ‘144 தடை’ உத்தரவு – இராமநாதபுரம் ஆட்சியர் அறிவிப்பு