திருவாரூர் மாவட்டத்தில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சி பொதுக்கூட்டத்தில் திமுகவினர் மது பாட்டில்களை வீசியதாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அருகே உள்ள சித்தமல்லியில் நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் அலாவுதீன் தலைமை வகித்தார். இந்தக் கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள் உரையாற்றினார்.
காளியம்மாள் திமுகவை விமர்சனம் செய்து பேசியதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், அந்தப் பகுதியில் திமுக கட்சி அலுவலகத்தில் அமர்ந்து இருந்த திமுகவினர், பொதுக்கூட்ட மேடைக்கு முன்பாக வந்து மது பாட்டில்களை வீசி தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. அந்த சமயத்தில் நாம் தமிழர் கட்சியினர் காளியம்மாளை சுற்றி நின்று பாதுகாத்தனர். மேலும் திமுகவுக்கு எதிராக முழக்கமிட்டனர்.
இதையடுத்து, அங்கு வந்த காவல்துறையினர் அவர்களது அலுவலகத்திலேயே அமர வைத்து வெளியில் வராதபடி தடுத்து நின்றதாக சொல்லப்டுகிறது. இதைத்தொடர்ந்து நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தியதன் காரணமாக மது பாட்டில் வீசிய இரண்டு திமுகவினரை கைது செய்ததாக காவல்துறையினர் நாம் தமிழர் கட்சியினரிடம் தெரிவித்துள்ளனர்.
திமுக-நாம் தமிழர் ஆகிய இரு கட்சியினரிடையே தொடர்ந்து மோதல் சம்பவங்கள் நிகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: அதிமுக – திமுக இடையே கடும் வாக்குவாதம்…