அரசு மதுக்கடையை மூடக் கோரி பாமக எம்.எல்.ஏ அருள், டாஸ்மாக் ஊழியரின் காலில் விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மேற்கு தொகுதியில் ஓமலூர் அருகே உள்ள முத்துநாயக்கன்பட்டியில் 20 ஆண்டுகளாக ஊரின் மத்தியில் மதுக்கடை ஒன்று இயங்கி வருகிறது. இந்த மதுக்கடையால் பொதுமக்கள் பெரிய பாதிப்பிற்குள் உள்ளாகி வருகின்றனர். குறிப்பாக குழந்தைகள் மற்றும் பெண்கள் அப்பகுதியை கடந்து செல்லும்போது பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
இச்சூழலில், கடந்த மாதம் பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த சேலம் மேற்குத் தொகுதி எம்எல்ஏ அருள் தலைமையில் மதுக்கடைக்கு பூட்டுப் போடும் போராட்டம் நடத்தினர். அப்போது காவல்துறையினர், டாஸ்மாக் நிர்வாகத்தினர் மதுக் கடையை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கு ஒரு மாதம் அவகாசம் கேட்டனர்.
இதைத்தொடர்ந்து, அவர்களின் கோரிக்கையை ஏற்று, அவகாசம் அளிக்கப்பட்டது. ஆனால் கொடுத்த அவகாச காலம் நேற்றொடு முடிந்து விட்டது. இருப்பினும், மதுக்கடையை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கான எந்த நடவடிக்கையையும் டாஸ்மாக் நிர்வாகம் மேற்கொள்ளவில்லை.
இந்நிலையில், டாஸ்மாக் கடையை மூடுவதற்கான வழிமுறைகள் குறித்து சேலம் மேற்குத் தொகுதி எம்எல்ஏ அருள் தலைமையில் பொதுமக்கள் ஆலோசனையில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து எம்எல்ஏ அருள், ஊராட்சி மன்றத் தலைவர்கள், பொதுமக்கள் அனைவரும் சென்று மதுக்கடையை திறக்கக்கூடாது என்று அங்கிருந்த ஊழியரிடம் கூறினர்.
அச்சமயத்தில், டாஸ்மாக் ஊழியரின் காலில் திடீரென விழுந்து எம்எல்ஏ அருள் கடையை மூடுவதற்கு வேண்டுகோள் விடுத்ததார். உடனடியாக அருகிலிருந்த அவரின் ஆதரவாளர்கள் அவரை எழுந்திருக்குமாறு கேட்டுகொண்டனர். இதைத்தொடர்ந்து அவர் அங்கிருந்து கிளம்பி சென்றார். இச்சம்பவம் மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: எம்மா.. என்ன அடி? மதுபோதையில் அப்பாவி பெண்ணை கொடூரமாக தாக்கிய 4 பெண்கள்-வைரல் வீடியோ