திண்டுக்கல் அம்மைநாயக்கனூர் காவல் நிலையம் முன்பு விஷம் குடித்து விவசாயி உயிரிழந்ததால், அலட்சியமாக இருந்த பெண் காவல் ஆய்வாளர் ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
திண்டுக்கல் மாவட்டம், குள்ளலக்குண்டு பகுதியைச் சேர்ந்தவர் பாண்டி. இவர் ஒரு விவசாயி. இவருக்கு சொந்தமான சிறுமலை அடிவாரப் பகுதியில் இருக்கும் நிலத்தை, பள்ளப்பட்டியைச் சேர்ந்த சில பேர் அச்சுறுத்தி மிரட்டி பறிக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதனால், கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாண்டியும் அவரது மகன் சதீஷ் கண்ணன் ஆகியோர் அம்மைநாயக்கனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்தப் புகார் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என சொல்லப்படுகிறது. இதையடுத்து, விவசாயி பாண்டி நிலக்கோட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்வதற்கு ஆணை பிறப்பித்தும் காவல்துறை வழக்குப்பதிவு செய்யவில்லை என சொல்லப்படுகிறது.
இதனால் மனமுடைந்த பாண்டி, கடந்த 7 ஆம் தேதி அம்மைநாயக்கனூர் காவல் நிலையத்தில் காவல்துறையினரை கண்டித்து கையில் மறைத்து வைத்திருந்த விஷத்தை அருந்தி மயங்கி விழுந்தார். பிறகு உயிருக்கு ஆபத்தான நிலையில் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விவசாயி பாண்டி, கடந்த பிப்ரவரி 9 ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதையடுத்து, உயிரிழந்த பாண்டி கொடுத்த புகாரின் அடிப்படையில் பள்ளப்பட்டி பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் சங்கர், நாச்சியப்பன், சின்ன கருப்பு ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு காவல்துறை கைது நடவடிக்கை எடுத்தது.
இந்நிலையில் விவசாயி விஷம் அருந்திய காணொளி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அதில், விவசாயி அருகில் அம்மைநாயக்கனூர் காவல் ஆய்வாளர் சண்முக லட்சுமி செல்போனில் பேசிக் கொண்டிருக்கும் காட்சி பதிவாகி உள்ளது.
இந்நிலையில், முறையாக இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியத்துடன் இருந்த காவல் ஆய்வாளர் சண்முக லட்சுமி திண்டுக்கல் ஆயுத படைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தொடர்ந்து இரண்டவாது நாளாக அசாமில் நிலநடுக்கம்; அச்சத்தில் மக்கள்!