2022-ம் ஆண்டுக்கான இருபது ஓவர் உலகக் கோப்பை ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இந்த உலகக் கோப்பை தொடரானது பலத்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே தொடங்கியது. ஆனால், அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா என்றால் அது கேள்விக்குறிதான்.
இந்தியா – பாகிஸ்தான் ஆட்டம், அயர்லாந்து – இங்கிலாந்து ஆட்டம், பாகிஸ்தான் – ஜிம்பாப்வே ஆட்டம் போன்றவை எதிர்பார்த்ததை விட விறுவிறுப்பாக இருந்தது. அதே சமயம் 4 ஆட்டங்கள் இதுவரை மழையால் கைவிடப்பட்டது ஏமாற்றமாக அமைந்துள்ளது.
இருபது ஓவர் உலகக் கோப்பைப் போட்டி மழை காரணமாக பல்வேறு தடைகளை எதிர்கொண்டுள்ளது. இதுவரை 4 ஆட்டங்கள் மழையால் கைவிடப்பட்டுள்ளன. நேற்று, மெல்போர்னில் நடைபெறவிருந்த ஆஸ்திரேலியா – இங்கிலாந்து ஆட்டம் மழை காரணமாகக் கைவிடப்பட்டது. இரு பெரிய அணிகளும் விளையாடும் இந்த ஆட்டத்தை ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த நிலையில் இந்த முடிவு ஏற்பட்டது.
ஏற்கெனவே இதே மைதானத்தில் ஆப்கானிஸ்தான் – அயர்லாந்து ஆட்டம் கைவிடப்பட்ட நிலையில் மற்றொரு ஆட்டமும் மழையால் பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் இரு ஆட்டங்கள் மழை காரணமாகக் கைவிடப்பட்டது ரசிகர்களிடையே ஏமாற்றத்தையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த உலகக் கோப்பைப் போட்டியில் ஆப்கானிஸ்தானின் கடைசி இரு ஆட்டங்கள் மழை காரணமாகக் கைவிடப்பட்டுள்ளன. மேலும், நியூசிலாந்து – ஆப்கானிஸ்தான் ஆட்டம், தென்னாப்பிரிக்கா – ஜிம்பாப்வே ஆட்டமும் கைவிடப்பட்டது.
மழை காரணமாக தொடர்ந்து ஆட்டங்கள் கைவிடப்படுவது ரசிகர்களிடையே ஏமாற்றத்தையும், அதிருப்தியையும் அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க: உள்துறை அமைச்சர்கள் மாநாடு: ஒரே நாடு ஒரே காவல்துறை சீருடை; பிரதமர் மோடி புதிய யோசனை