இந்த முகத்தை யார் பார்ப்பார் என்ற விமர்சனத்தில் ஆரம்பித்து, இந்த முகத்தை பார்க்க மட்டுமே திரையரங்குகளுக்குள் ரசிகர்கள் வருகிறார்கள் என்ற விமர்சனம் வரும் அளவிற்கான வளர்ச்சி என்பது அவ்வளவு எளிதில் எவருக்கும் வாய்த்திடாது. இந்த அசுரத்தனமான வளர்ச்சி என்பது நடிகர் விஜய்க்கு வாய்த்துள்ளது என்றால் அது மிகையாகாது.
கொஞ்சம் கொஞ்சமாக தன்னை மெருகேற்றி, தகவமைத்து மக்களுக்கு பிடித்த கதாநாயகனாக நடிகர் விஜய் மாறினார். வெறுமனே பிடித்த நடிகர் மட்டுமா என்றால் அப்படி இல்லை. அண்ணன், நம்ம வீட்டுப்பிள்ளை, நண்பன், தலைவன் என பல பரிணாமங்களில் ரசிகர்களுக்கு நெருக்கமாக நடிகர் விஜய் தற்போது உள்ளார்.
ரசிகர்களின் மனதில் இப்படியென்றால், சினிமாவைப் பொறுத்தவரையில் ஒட்டுமொத்த இந்திய திரையுலமும் வியந்து பார்க்கும் ஒரு வெற்றி கலைஞனாக, உச்சநட்சத்திரமாக தற்போது விஜய் வலம் வந்து கொண்டிருக்கிறார். இனி எவரேனும் தென்னிந்திய சினிமா வரலாற்றைப் பற்றி பேசினால் அதில் விஜய் பெயர் இல்லாமல் இருக்கவே இருக்காது.
இப்படியான வளர்ச்சியை எட்டியிருக்கும் விஜய், 1992-ஆம் ஆண்டு டிசம்பர் 4-ஆம் தேதி வெளிவந்த நாளைய தீர்ப்பு என்ற திரைப்படத்தின் மூலமாக கதாநாயகனாக உருவெடுத்தார். நாளைய தீர்ப்பு திரைப்படத்தின் மூலமாக கதாநாயகனாக நடிகர் விஜய் அறிமுகமானாலும், அதற்கு முன்னமே, வெற்றி, குடும்பம், வசந்த ராகம், சட்டம் ஒரு விளையாட்டு, இது எங்கள் நீதி, நான் சிகப்பு மனிதன் போன்ற திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். நடிகர் விஜய்யின் தந்தை புகழ்பெற்ற இயக்குநர் என்பதால், தனது சினிமா வாழ்க்கையின் ஆரம்ப காலக்கட்டத்தில், அவரது தந்தையான எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் நடித்தார்.
1992-ஆம் ஆண்டு கதாநாயகனாக அறிமுகமானாலும், 1996-ஆம் ஆண்டு வெளிவந்த பூவே உனக்காக திரைப்படத்தின் மூலம் விஜய் மாபெரும் வெற்றியை ருசித்தார். குடும்பங்களின் செல்லப் பிள்ளையானார். இதன் பிறகு, விஜய்யின் திரைவாழ்க்கை வெவ்வேறு கோணங்களை கொண்டதாக இருந்தது. காதல் நாயகனாக, குடும்ப நாயகனாக, ஆக்ஷன் நாயகனாக என அந்த கோணங்களை கூறலாம்.
1996-இல் இருந்து அடுத்த நான்கு வருடங்களில் பல ஹிட் திரைப்படங்களைக் கொடுத்து அதிகளவில் ரசிகர்களை கவர்ந்தார். அப்போது ஆரம்பித்த விஜய்யின் கவர்தல் என்பது, இக்காலம் வரை நீண்டபடியே இருக்கிறது. கிட்டத்தட்ட 30 ஆண்டுகளை திரைத்துறையில் நடிகர் விஜய் தற்போது பூர்த்தி செய்துள்ளார். வெறுமனே வெற்றிகளால் மட்டுமல்ல, தோல்விகளாலும், எதிர்மறை கருத்துகளாலும் விஜய்யின் திரைவாழ்க்கை என்பது கட்டப்பட்டுள்ளது. வெற்றிகள் தோல்விகளைத் தாண்டி, விஜய்யின் திரைப்படங்களுக்கு பிரச்சினை எழுவதென்பது வாடிக்கையான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது.
அப்படியாக விஜய்யின் திரைப்படங்களுக்கு நேரடியாக ஏற்பட்ட பிரச்சினைகள் சிலவற்றை இத்தொகுப்பில் காணலாம்.
புதிய கீதை
நடிகர் விஜய் நடிகை மீரா ஜாஸ்மீனுடன் இணைந்து நடித்த இத்திரைப்படத்தை அப்போதைய அறிமுக இயக்குநர் கே.பி.சுகன் இயக்கினார். மேலும், இத்திரைப்படத்திற்கு கார்த்திக் ராஜா பின்னணி இசையமைக்க, யவுன் சங்கர் ராஜா இத்திரைப்படத்திற்காக பாடல்களை உருவாக்கினார்.
இத்திரைப்படத்திற்கு ஆரம்பத்தில் ‘கீதை’ என்று பெயர் வைக்கப்பட்டது. ஆனால், படத்திற்கு ‘கீதை’ என்று பெயர் வைக்கக்கூடாது என இந்து அமைப்பினர் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து,
‘புதிய கீதை’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு மே 8-ஆம் தேதி 2003-ஆம் ஆண்டு வெளிவந்தது.
காவலன்
மலையாளத்தில் பெரிய ஹிட் அடித்த ‘பாடி கார்ட்’ திரைப்படத்தை இயக்கிய சித்திக் இயக்கத்தில் விஜய் நடித்த திரைப்படம்தான், காவலன். அசின் ஜோடியாக நடித்த இத்திரைப்படமானது, பொங்கல் வெளியீடாக 2011-ஆம் ஆண்டு ஜனவரி 15-ஆம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டது.
ஆனால், காவலன் திரைப்படத்திற்கு முன்பு விஜய் நடிப்பில் வெளிவந்த சுறா திரைப்படம் தோல்வியடைந்தைத் தொடர்ந்து, அத்திரைப்படத்திற்கான நஷ்ட ஈடு தொகையை நடிகர் விஜய் திருப்பி தர வேண்டும் என்று சில திரையரங்கு உரிமையாளர்கள், சில விநியோகஸ்தர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, ‘சுறா’ படத்திற்கான நஷ்ட ஈடு தொகையை நடிகர் விஜய் கொடுத்ததைத் தொடர்ந்து ‘காவலன்’ திரைப்படம் வெளியானது.
துப்பாக்கி
2012-ஆம் ஆண்டு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் காஜல் அக்ரவாலுடன் விஜய் நடித்த திரைப்படம்தான், துப்பாக்கி. இத்திரைப்படம், வெளியாகும் முன்பு படத்தின் தலைப்பை மாற்றக்கோரி ‘கள்ளத்துப்பாக்கி’ படக் குழுவினர் வழக்குத் தொடர்ந்தனர். இருப்பினும், துப்பாக்கி என்ற பெயரிலேயே திரைப்படம் வெளியானது.
இருப்பினும், திரைப்படம் வெளிவந்த பிறகு திரைப்படத்தில் உள்ள சில தீவிரவாத காட்சிகளை நீக்கக் கோரி எதிர்ப்பு கிளம்பியது குறிப்பிடத்தக்கது.
தலைவா
2013-ஆம் ஆண்டு ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவான தலைவா திரைப்படத்தின் வெளியீட்டின் போது, திரையரங்குகளில் வெடிகுண்டு வைக்கப்படும் என்று மர்ம கடிதம் வந்ததாகக் கூறி, அரசு தலைவா திரைப்படத்திற்கு தடை விதித்தது.
இதைத்தொடர்ந்து, தலைவா திரைப்படத்தின் டைட்டிலில் வைக்கப்பட்ட ‘டைம் டூ லீட்’ வாசகம் நீக்கப்பட்டு படம் 11 நாட்கள் கழித்து வெளியிடப்பட்டது. இதர மாநிலங்களில் தலைவா முன்பே வெளியானது.
கத்தி
துப்பாக்கி திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஏ.ஆர் .முருகதாஸ்-விஜய் கூட்டணியில் 2014-ஆம் ஆண்டு உருவான திரைப்படம்தான், கத்தி. மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவான இத்திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்திருந்தது.
இதனால், ராஜபக்சேவுக்கு நெருக்கமான லைகா நிறுவனம் தயாரித்திருந்ததாக கூறி, ‘கத்தி’ படத்தை வெளியிடக்கூடாது என சில தமிழக அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன.
புலி
2015-ஆம் ஆண்டு விஜய்யின் மற்றொரு பரிணாமத்தில் உருவானது, புலி திரைப்படம். ஹன்சிகா, ஶ்ரீதேவி ஆகியோர் நடிக்க, சிம்புதேவன் இயக்கத்தில் உருவான இத்திரைப்படத்தை செல்வகுமார், சிபுஜி கே. தமீன் ஆகியோர் தயாரித்திருந்தனர்.
புலி திரைப்படத்தின் அக்டோபர் 1-ஆம் தேதி 2015-ஆம் ஆண்டு வெளியானது. ஆனால், அன்றைய நாள் நடிகர் விஜய் மற்றும் தயாரிப்பாளர்கள் வீட்டில் வருமான வரித்துறையினர் முதல்நாள் அதிரடி சோதனை நடத்தியதால், ‘புலி’ திரைப்படத்தின் அதிகாலை, காலை காட்சிகள் எல்லாம் ரத்து செய்யப்பட்டு தாமதமாக திரையிடப்பட்டது.
தெறி
அட்லீ இயக்கத்தில் உருவான தெறி படத்தில் விஜய்யுடன், பிரபல இயக்குநர் மகேந்திரன் நடித்திருந்தார். இத்திரைப்படம் ஏப்ரல் 14-ஆம் தேதி 2016-இல் திரையரங்குகளில் வெளியானது.
ஆனால், திரைப்படம் வெளியாகும் முன்பு , மினிமம் கேரண்டி முறையில் ‘தெறி’ படத்தை வாங்கக் கூறி வற்புறுத்தப்பட்டதாக தெரிவித்து, விநியோகஸ்தர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு பின்பு சுமூகமானது.
மெர்சல்
தெறி திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் மெர்சல் திரைப்படத்தின் மூலம் விஜய் மற்றும் அட்லீ கூட்டணி இணைந்தது. மிகப்பெரிய எதிர்பார்ப்பை இந்த மெர்சல் திரைப்படம் உருவாக்கியது.
இதைத்தொடர்ந்து, மெர்சல் திரைப்படத்தின் முன்னோட்டங்கள் வெளியாக சர்ச்சைகள் வெடித்தன. இத்திரைப்படத்தில் விஜய் பேசிய வசனங்களுக்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும், திரைப்படம் வெளியாவதற்கு 24 மணிநேரத்திற்கு முன்னர் வரை சென்சார் சான்றிதழ் கொடுக்கப்படாமல் இருந்தது. இதுமட்டுமன்றி, விலங்கு நல அமைப்புகளிடமிருந்து சான்றிதழ் வாங்கவில்லை எனக்கூறி சில காட்சிகள் திரைப்படத்திலிருந்து நீக்கப்பட்டன. அனைத்து பிரச்சினைகளையும் சுமந்தவாறே, 2017-ஆம் ஆண்டு தீபாவளி வெளியிடாக மெர்சல் வெளிவந்தது.
சர்கார்
கத்தி, துப்பாக்கி திரைப்பட வெற்றிகளைத் தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் மூன்றாவது முறையாக நடித்த திரைப்படம்தான், சர்கார். 2018-ஆம் ஆண்டு தீபாவளி வெளியிடாக சர்கார் திரைப்படம் வெளிவந்தது.
ஆனால், திரைப்படம் வெளியாகும் முன்பு ‘சர்கார்’ படத்தின் கதை தன்னுடைய கதையின் தழுவல் எனக் கூறி வருண் ராஜேந்திரன் என்பவர் வழக்குத் தொடர்ந்தார். இதைத்தொடர்ந்து, சர்ச்சைகள் உருவானது.
பிகில்
இயக்குநர் அட்லீயுன் தெறி, மெர்சல் திரைப்படத்திற்கு நடிகர் விஜய் இணைந்த திரைப்படம்தான், பிகில். 2019-ஆம் ஆண்டு தீபாவளி வெளியிடாக இத்திரைப்படம் வெளிவந்தது.
படம் வெளியாகும் முன்பு, பிகில் திரைப்படத்தின் போஸ்டர்கள் வெளியிடப்பட்டன. அப்படி வெளியிடப்பட்ட போஸ்டரில், இறைச்சி வெட்டும் மரக்கட்டையின் மீது விஜய் கால் வைத்திருப்பது போன்ற காட்சி இடம்பெற்றிருந்தது. இந்த காட்சியை கண்டித்து வியாபாரிகள் சங்கத்தினர் போராட்டம் நடத்தினர்.
மாஸ்டர்
நடிகர் விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் இணைந்த திரைப்படம்தான், மாஸ்டர். இப்படத்தின் படப்பிடிப்பு நெய்வேலி நிலக்கரி சுரங்கப் பகுதியில் நடைபெற்று வந்தபோது, விஜய்யின் வீடு, அலுவலகத்தில் வருமானவரி சோதனை நடந்தது. இதனால் அவரது ரசிகர்கள் பெருமளவில் நெய்வேலியில் குவிந்தனர்.
இந்த பிரச்சினையை தொடர்ந்து கொரோனாவின் ருத்ரதாண்டவத்திற்கு பிறகு இத்திரைப்படம் பொங்கல் வெளியிடாக 2021-ஆம் ஆண்டு பொங்கல் வெளியிடாக திரைக்கு வந்தது. 100 சதவீத இருக்கைகள் அனுமதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 50 சதவீத இருக்கைகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டன.
பீஸ்ட்
கோலமாவு கோகிலா, டாக்டர் திரைப்படத்தின் வெற்றிகளைத் தொடர்ந்து நெல்சன் திலீப்குமார் இயக்கிய பீஸ்ட் திரைப்படத்தில், இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக காண்பித்தாக கூறி குவைத் போன்ற நாடுகளில் பீஸ்ட் திரைப்படம் தடை செய்யப்பட்டது.
வாரிசு
நடிகர் விஜய் தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில், தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ இயக்கத்தில் தற்போது ‘வாரிசு’ என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. இத்திரைப்படம் வருகிற பொங்கல் திருநாளை முன்னிட்டு வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விழாக்காலங்களில் நேரடித்தெலுங்குத் திரைப்படங்களுக்கு மட்டுமே ஆந்திராவில் முன்னுரிமை அளிக்கப்படும் எனும் தெலுங்குத் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்தது. இதனால் ஆந்திரா, தெலங்கானாவில் ‘வரசுடு’ என்ற பெயரில் வெளியாகவுள்ள இந்த படத்திற்கு எதிர்ப்பு கிளம்பியது.
தன் திரைப்படங்களுக்கு இவ்வறான நேரடி பிரச்சினைகளும், மறைமுக பிரச்சினைகளும் தொடர்ந்து வந்தாலும் அதையெல்லாம் பெரிதும் பொருட்படுத்தாமல், தன் வெற்றிப்பாதையின் வழியே தொடர்ந்து சென்று இந்தியாவின் உச்ச நட்சத்திரமாக நடிகர் விஜய் தற்போது திகழ்ந்து வருகிறார்.
சிங்க பெண்ணாக வலம் வந்து பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்திய ஜெ.ஜெயலலிதா..