சாகித் அப்ரிடியைத் தொடர்ந்து, சோயிப் அக்தரின் கருத்துக்கு இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் கடும் எதிரப்பு தெரிவித்து வருகின்றனர்.
விராட் கோலி உலகின் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவர் என்பதில் மாற்று கருத்தே இருக்காது. ஆனால், கடந்த சில வருடங்களாக விராட் கோலி ஃபார்ம் இல்லாமல் திணறி வந்தார். இந்நிலையில், ஆசியக் கோப்பைத் தொடரில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் சதமடித்து அனைவரின் பாராட்டையும் பெற்றார்.
இந்நிலையில், விராட் கோலி அக்டோபர் – நவம்பரில் ஆஸ்திரேலியாவில் நடக்கும் இருபது ஓவர் உலக கோப்பையுடன் சர்வதேச இருபது ஓவர் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறலாம் என்ற சோயிப் அக்தர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: விராட் கோலியை சீண்டிய அப்ரிடி .. கண்டனங்களை பதிவிடும் ரசிகர்கள்!
சோயிப் அக்தர் பேசுகையில், ” ஆஸ்திரேலியாவில் நடக்கவிருக்கும் இருபது ஓவர் உலகக் கோப்பைக்குப் பிறகு கோலி இருபது ஓவர் ஆட்டங்களில் இருந்து ஓய்வு பெறலாம். மற்ற வடிவங்களில் தனது நீண்ட ஆயுளை நீட்டிக்க அவர் அதைச் செய்யலாம். நான் அவராக இருந்தால் பெரிய இலக்கை நோக்கி அந்த முடிவை தான் எடுத்திருப்பேன்” என்று கூறியுள்ளார்.
இவரின் இந்த பேச்சுக்கு இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். முன்னதாக, கோலி ஓய்வுக்குறித்து பேசிய சாகித் அப்ரிடிக்கு இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் வீரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.