ஐனவரி முதல் மே வரை மட்டுமே ஜல்லிக்கட்டு நடத்தலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மதுரை பள்ளிப்பட்டியில் உள்ள ஶ்ரீ முத்தலாம்மன் கோயில் திருவிழாவில் வரும் 15-ம் தேதி மஞ்சுவிரட்டு நடத்த அனுமதி கோரி மகராஜன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கு தொடர்பாக தமிழக அரசு தாக்கல் செய்த மனுவில், ஐனவரி முதல் மே வரை மட்டுமே ஜல்லிக்கட்டு, வடமாடு, மஞ்சுவிரட்டு போன்றவை நடத்த அனுமதிக்கப்படும் என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் இந்த விளக்கத்தை ஏற்ற உயர்நீதிமன்ற மதுரைக்கிளை , மகராஜன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
தமிழகத்தில் பெரும்பாலும், தை-மாதத்தில் ஜல்லிக்கட்டு, வடமாடு, மஞ்சுவிரட்டு போன்றவை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.