உத்தரபிரதேசத்தில் விவசாயி ஒருவர் மழை கொடுக்காத கடவுள் இந்திரன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார்.
உத்தரபிரதேசம் மாநிலம் கூண்டா மாவட்டத்தில் உள்ள ஜாலா எனும் கிராமத்தைச் சேர்ந்தவர் சுபித்குமார் யாதவ். இவர் கடந்த ஜூலை 16-ம் தேதி நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டத்தில் கலந்துகொண்டார்.
இந்தக் குறைதீர்ப்பு கூட்டத்தில் புகார் ஒன்றை அளித்தார். அந்தப் புகாரில், தனது கிராமத்தில் கடந்த பல மாதங்களாக மழை பொழியவில்லை. இதனால் என்னால் விவசாயம் செய்ய முடியவில்லை. நான் மட்டுமல்ல எங்கள் கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் அனைவரும் மழை இல்லாததால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆகவே, இதற்கு காரணமான கடவுள் இந்திரன் மீது நடவடிக்கை எடுக்குமாறு சுபித்குமார் யாதவ் அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.
இந்த மனுவைப் பெற்ற தாசில்தார் அதைப் படிக்காமல், மேல் நடவடிக்கைக்காக மாவட்ட உயர் அதிகாரிகளுக்கு அனுப்பியதாக கூறப்படுகிறது. ஆனால், இதை தாசில்தார் மறுத்துள்ளார்.
இதைத்தொடர்ந்து, சுபித்குமார் யாதவ் அளித்த புகாரின் நகல் தற்போது சமூக வலைதளங்களில் பரவிவருகிறது. அந்தப் புகார் மனுவில் தாசில்தாரின் கையொப்பம், அதிகாரப்பூர்வ முத்திரை மற்றும் ‘அடுத்த நடவடிக்கைக்கு அனுப்பப்பட்டது’ என்று குறிப்பு உள்ளது.
மேலும், மாவட்ட அதிகாரிகள் இது குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளனர். இந்த வழக்கு விசாரணை சிஆர்ஓ ஜெய் யாதவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மேலும், இதுகுறித்து தாசில்தார் கூறுகையில், சம்பூர்ண சமாதான் திவஸ் (குறைதீர்ப்பு கூட்டம்) அன்று பெறப்படும் புகார் மனுக்கள் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பப்படும். மேலே குறிப்பிட்டது போன்ற மனுக்கள் எந்த அலுவலகத்துக்கும் அனுப்பப்படாது. இது தொடர்பாக விசாரணை நடந்து கொண்டிருக்கிறது என தெரிவித்தார்.
இந்த புகார் மனு குறித்து விவசாயி சுமித் குமார் கூறுகையில், தனது கிராமத்தில் நிலவும் வறட்சியால் மக்கள் கடும் துயரத்தை அனுபவித்து வருகின்றனர். இதை உயர் அதிகாரிகள் கவனத்துக்குக் கொண்டு செல்லவே இவ்வாறான புகார் மனுவை அளித்தேன் என்று தெரிவித்தார்.
இந்திரன் என்பவர் இந்து மழைக்கடவுள் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னாள் ஐ.ஜி.பொன் மாணிக்கவேல் மீது சிபிஐ விசாரணை