2022-ம் ஆண்டுக்கான இருபது ஓவர் ஆசியக் கோப்பையை இலங்கை அணி வென்றது.
ஆசியக் கோப்பையானது ஜக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரானது நேற்று இறுதிக்கட்டத்தை எட்டியது. ஆம், நேற்று இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே ஆசியக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டி நடைபெற்றது.
இப்போட்டியில், டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து பேட்டிங் செய்ய களமிறங்கிய இலங்கை அணி தடுமாறியது. பதும் நிஸாங்கா 8, குஸாஸ் மெண்டிஸ் 0, தனுஷ்கா குணதிலகா 1, தனஞ்செய டி சில்வா 28, தஸுன ஷனகா 2 என சொற்ப ரன்களுடன் வெளியேற 58/5 ஸ்கோருடன் தடுமாறியது இலங்கை .
துவண்டுப்போன இலங்கை அணியை பானுகா ராஜபட்ச-வனின்டு ஹஸரங்க இணை நிமிர வைத்தது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 170/6 ரன்களைக் குவித்தது இலங்கை,
இதைத்தொடர்ந்து, 171 ரன்கள் வெற்றி இலக்குடன் ஆடிய பாகிஸ்தான் வீரர்களை இலங்கை அணி பந்துவீச்சாளர்கள் திணறடித்தனர். தொடக்க பேட்டர் முகமது ரிஸ்வான் 55, இப்திகார் அகமது 32 ஆகியோர் மட்டுமே ஒரளவு ரன்களை எடுத்தனர்.
ஏனைய வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களோடு வந்த வேகத்திலேயே நடையைக் கட்டினர். 20 ஓவர்களில் 147 ரன்களுக்கு ஆல் அவுட்டானது பாகிஸ்தான். இதனால், 2022-ம் ஆண்டுக்கான இருபது ஓவர் ஆசியக் கோப்பையை இலங்கை அணி வென்றெடுத்தது.
தொடர்ந்து பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வரும் இலங்கை மக்களுக்கு இலங்கை அணியின் இந்த வெற்றி சிறு ஆறுதலாக இருக்கும் என்று பலராலும் நம்பப்படுகிறது.
இதையும் படிங்க : 130 நாடுகளின் தேசிய கீதங்களை பாடி அசத்திய சென்னை சிறுமி!