திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 300 ரூபாய்க்கான சிறப்பு தரிசன சீட்டுகள் இன்று ஆன்லைன் வாயிலாக வெளியிடப்பட்டு உள்ளன.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மார்கழி மாதத்தில் மிக முக்கிய நிகழ்வான சொர்க்க வாசல் திறப்பு ஜனவரி 2 ஆம் தேதி நடைபெறுகிறது. 2 ஆம் தேதி திறக்கப்படும் சொர்க்க வாசல் ஜனவரி 11 தேதி வரை திறந்து இருக்கும். இதற்கான சிறப்பு தரிசன சீட்டுகளை திருப்பதி தேவஸ்தானம் இன்று காலை ஒன்பது மணிக்கு வெளியிட்டுள்ளது. அதன்படி, 300 ரூபாய்க்கான சிறப்பு தரிசன சீட்டுகள் வெளியிடப்பட்டுள்ளன.
ஜனவரி 2 முதல் ஜனவரி 11 ஆம் தேதி வரை 10 நாட்களும் தினசரி 25 ஆயிரம் தரிசன சீட்டுகள் என்ற முறையில் 2.5 லட்சம் தரிசன சீட்டுகள் வெளியிடப்பட்டுள்ளன.
அதே சமயம் வருகிற ஜனவரி மாதம் 2 ஆம் தேதி வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, 27 ஆம் தேதி கோயில் ஆழ்வார் திருமஞ்சன நிகழ்ச்சிகளும் நடைபெற இருக்கின்றன. இதன் காரணமாக கோயில் முழுவதும் வாசனை திரவியங்கள் கொண்டு சுத்தம் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
காலை 6 மணி முதல் 10 மணி வரை கோயிலில் ஆழ்வார் திருமஞ்சன நிகழ்ச்சிகள் நடைபெறும் என்பதால், 27 ஆம் தேதி காலை 11 மணிக்கு மேல் தான் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர்.
இந்த சொர்க்க வாசல் தரிசனத்திற்கான கட்டண சீட்டுகளை tirupatibalaji.ap.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக பெற்றுக்கொள்ளலாம்.
தில்லிக்குள் நுழைந்த ராகுல்காந்தியின் நடைபயணம்…