ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
தீனா, ரமணா, கஜினி, 7-ம் அறிவு, துப்பாக்கி, கத்தி என தொடர்ச்சியாக வெற்றித்திரைப்படங்களை இயக்கிய ஏ.ஆர்.முருகதாஸூக்கு கடைசியாக இயக்கிய ஸ்பைடர், சர்கார், தர்பார் போன்ற படங்கள் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை.
இதன்பின்பு, விஜய்யின் 65-வது படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தயாரிப்பு நிறுவனத்திற்கு இயக்குநருடன் ஏற்பட்ட மனக்கசப்பின் காரணமாக அந்த திரைப்படம் கைவிடப்பட்டது.
இதைத்தொடர்ந்து, ஏ.ஆர்.முருகதாஸ் எந்தவொரு திரைப்படத்தையும் இயக்காமல் இருந்தார். இந்நிலையில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
தற்போது, மடோனோ அஸ்வின் இயக்கும் ‘மாவீரன்’ திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இப்படத்திற்கு பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பார் என்று தகவல்கள் வெளிவந்துள்ளது.
முன்னதாக, கமல்ஹாசன் தயாரிப்பில் ரங்கூன் திரைப்படத்தின் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருப்பதாக ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஆனால், இத்திரைப்படத்தின் அப்டேட்டுகள் குறித்த எந்தவொரு தகவலும் வராத நிலையில் ஏ.ஆர்.முருகதாஸ் திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பதாக வந்துள்ள தகவல் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
சிவகார்த்திகேயன் நடித்த மான் கராத்தே திரைப்படத்தின் திரைக்கதையை ஏ.ஆர்.முருகதாஸ் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
காந்தாராவின் இரண்டாம் பாகம் எப்படி இருக்கப்போகுது தெரியுமா?