அதிமுகவில் ஏற்பட்டுள்ள உள்கட்சி மோதல் தான் தமிழகத்தின் தற்போதைய பேசுபொருள். எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ. பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் எதிரெதிர் துருவங்களாக பிரிந்து தலைமைக்காக மோதுகின்றனர்.
இந்நிலையில், இபிஎஸ் தான் தலைமைப் பொறுப்பை ஏற்க வேண்டும் என தொண்டர்கள் விரும்புவதாக, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். நடந்து முடிந்த பொதுக்குழு கூட்டத்தில், ஓபிஎஸ் வெளிநடப்பு செய்த நிலையில், எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கு எதிராக, நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தொடர்ந்துள்ளது ஓபிஎஸ் தரப்பு.
கடந்த ஜூன் மாதம் 23 ஆம் தேதி, சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு திருமண மண்டபத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்தில், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய இருவரும் ஒப்புதல் அளித்த 23 தீர்மானங்களை தவிர்த்து, வேறு எந்த தீர்மானங்களையும் நிறைவேற்றக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், இந்த 23 தீர்மானங்களையும் பொதுக்குழு உறுப்பினர்கள் நிராகரித்து விட்டதாக சிவி சண்முகம் மற்றும் கேபி முனிசாமி உள்ளிட்டோர் அறிவித்தனர்.
மேலும், புதிய முடிவுகள் எதுவும் பொதுக்குழுவில் எடுக்கக் கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், அதிமுகவின் அவைத் தலைவராக தமிழ் மகன் உசேன் தேர்ந்தெடுக்கப்பட்டார். அடுத்த பொதக்குழு வருகின்ற ஜூலை 11 ஆம் தேதி நடைபெறும் என தமிழ் மகன் உசேன் அறிவித்துள்ளார். 23 தீர்மானங்களை நிராகரித்தது மட்டுமல்லாது, அவைத்தலைவரை தேர்வு செய்தது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல் என ஓபிஎஸ் தரப்பு குற்றம் சாட்டியது.
அதிமுக பொதுக்குழு உறுப்பினர் சண்முகம், பொதுக்குழு மற்றும் செயற்குழு இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோருக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தொடர்ந்து இருக்கிறார். அதிமுகவில் 23 தீர்மானங்களைத் தவிர, வேறு எந்தவித தீர்மானங்களையும் கொண்டு வரக்கூடாது என முறையீடு செய்து, அதில் வெற்றி கண்டதும் இதே சண்முகம் தான்.
தற்போது இபிஎஸ் தரப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருக்கும் மனுவில், பொதுக்குழுவில் 23 தீர்மானங்களை மட்டுமே நிறைவேற்ற வேண்டும் என 2 நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டது. ஆனால் அந்த உத்தரவு மீறப்பட்டுள்ளது. நீதிமன்றம் அனுமதித்த தீர்மானங்களை பொதுக்குழு நிராகரித்தது. அவைத் தலைவராக தமிழ் மகன் உசேனை நியமனம் செய்தது மற்றும் ஜூலை 11-ல் அடுத்த பொதுக்குழு என்று அறிவிக்கப்பட்டதும் நீதிமன்ற உத்தரவை அவமதிக்கும் கண்டிக்கத்தக்க செயல் என சண்முகம் தெரிவித்திருக்கிறார்.