‘பள்ளிகள் கோயில்களுக்கு இணையானவை. கல்வி மட்டுமல்ல.. கட்டுப்பாடு, ஒழுக்கம் ஆகியவற்றையும் கற்றுத்தர வேண்டியது தான் ஆசிரியரின் பணி’ என திருவண்ணாமலையில் பள்ளி ஆசிரியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டதை கண்டிக்கும் வகையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே அரசு மேல்நிலைப்பள்ளியில், 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன், சிகரெட் புகைத்ததாகவும் மேலும் சாலையில் சென்ற பெண்களிடம் வம்பு இழுத்ததாகவும் கூறப்படுகிறது.
இதனையடுத்து பள்ளிக்கு சென்ற மாணவனை ஆசிரியர்கள் உள்ளே அனுமதிக்க மறுத்ததாகவும் அடித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால், கோபமடைந்த மாணவன் தனது பெற்றோர்களிடம் நடந்ததை கூறாமல், சாதி பெயரை குறிப்பிட்டு, ஆசிரியர்கள் திட்டியதாக கூறியிருக்கிறான். இதனால், விடுதலை சிறுத்தைகள் கட்சியினரைச் சேர்ந்தவர்கள் இதில் தலையிட்டுள்ளனர். இந்தப் புகாரின் பேரில் இரு ஆசிரியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இதுகுறித்து பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளதாவது:
திருவண்ணாமலை மாவட்டம் சேவூரில் சிகரெட் பிடித்து மாணவிகள் மீது புகை விட்ட 11-ஆம் வகுப்பு மாணவரை கண்டித்ததற்காக இரு ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்; இரு ஆசிரியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்ற செய்தி பெரும் அதிர்ச்சி அளிக்கிறது.
பள்ளிகள் கோயில்களுக்கு இணையானவை. கல்வி மட்டுமல்ல.. கட்டுப்பாடு, ஒழுக்கம் ஆகியவற்றையும் கற்றுத்தர வேண்டியது தான் ஆசிரியரின் பணி. அதைத் தான் ஆசிரியர்கள் செய்திருக்கிறார்கள். அதற்காக அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது நியாயமல்ல; இது தவறான முன்னுதாரணமாகிவிடும்.
ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதைக் கண்டித்து பள்ளி மாணவ, மாணவியரும், ஊர்மக்களும் சாலை மறியல் போராட்டம் செய்துள்ளனர் என்பதிலிருந்தே உண்மை நிலை என்ன? என்பதை உணர முடியும். தவறுகள் திருத்தப்பட வேண்டும். தொடரக் கூடாது.
மாணவனை கண்டித்ததற்காக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட 2 ஆசிரியர்களை உடனடியாக பணியில் சேர்க்க வேண்டும். மற்ற இரு ஆசிரியர்களின் பணியிட மாற்றத்தை ரத்து செய்ய வேண்டும். மாணவர்களுக்கு அற நெறிகள் கற்றுத் தரப்படுவதை கட்டாயமாக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : இந்திய வரலாற்றில் முதன் முறையாக உச்சநீதிமன்ற வழக்கு நேரலை