சர்வதேச இருபது ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன்களை எடுத்தவர் என்ற சாதனையை இந்திய அணியின் கேப்டன் ரோகித் ஷர்மா படைத்துள்ளார்.
இந்திய அணி தற்போது ஆசியக் கோப்பை போட்டியில் பங்கேற்று விளையாடி வருகிறது. இப்போட்டியின் முதல் ஆட்டத்தில் இந்திய அணி பாகிஸ்தான் அணியை எதிர்கொண்டது.
துபாயில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பாகிஸ்தான் 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் சேர்த்தது. அடுத்து இந்தியா 19.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் எடுத்து வென்றது. இந்த ஆட்டத்தின் ஆட்ட நாயகனாக ஹார்திக் பாண்டியா தேர்வு செய்யப்பட்டார்.
இந்த ஆட்டத்தின்போது, இந்திய அணியின் கேப்டன் ரோகித் ஷர்மா சாதனை ஒன்றை படைத்துள்ளார். பாகிஸ்தான் வீரர் மொஹமது நவாஸ் வீசிய 8- வது ஓவரில் ரோகித் சர்மா சிக்ஸர் அடித்தார். இந்த சிக்சரின் மூலம் சர்வதேச இருபது ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன்களை எடுத்தவர் என்ற சாதனையை ரோகித் சர்மா படைத்தார்.
இதற்குமுன் நியூசிலாந்து வீரர் மார்டின் கப்டில் 3497 ரன்களுடன் முதலிடத்தில் இருந்தார். தற்போது ரோகித் சர்மா இவரை பின்னுக்குத்தள்ளி முதலிடம் பிடித்துள்ளார்.
சர்வதேச இருபது ஓவர் கிரிக்கெட்டில் அதிக ரன்களை அடித்த வீரர்கள்:
- ரோகித் சர்மா (இந்தியா) – 3499 ரன்கள்
- மார்டின் கப்டில் (நியூசிலாந்து) – 3497 ரன்கள்
- விராட் கோலி (இந்தியா) – 3343 ரன்கள்
- பிஆர். ஸ்டிரில்லிங் (அயர்லாந்து) – 3011 ரன்கள்
- ஆரோன் பின்ச் (ஆஸ்திரேலியா) – 2855 ரன்கள்
- பாபர் அசாம் (பாகிஸ்தான்) – 2696 ரன்கள்