Saturday, May 4, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்வெறுமனே வெற்றிகளால் நிறைந்தவர் இல்ல, ரஜினிகாந்த்... - பர்த்டே ஸ்பெஷல்!

    வெறுமனே வெற்றிகளால் நிறைந்தவர் இல்ல, ரஜினிகாந்த்… – பர்த்டே ஸ்பெஷல்!

    ரஜினிகாந்த் – 47வருடங்களுக்கு மேலாக திரைத்துறையின் தான் யார் என்பதை தொடர்ந்து நிரூபனம் செய்துக்கொண்டிருக்கும் ஒரு கலைஞன். சறுக்கல்களை படிக்கட்டுகளாக மாற்றும் வித்தை தெரிந்த வித்தகர். கோடான கோடி ரசிகர்களின் தலைவர். இந்திய சினிமாவின் முதன்மையான அடையாளமாய் திகழ்ந்துக் கொண்டிருக்கும் ஒரு பெயர்.

    திரைத்துறையில் பல முன்னேற்றங்கள் நிகழ்ந்ததற்கும், திரைத்துறைக்குள் பலர் வருவதற்கும் முக்கிய காரணியாக உள்ள சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்திற்கு இன்று பிறந்தநாள். உலகமெங்கும் அவரது ரசிகர்கள் பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர்.

    அப்படிப்பட்ட இந்நாளில், ஆக்‌ஷன், ஸ்டைல், நகைச்சுவை, உணர்ச்சிவசம் என சகலத்திலும் வல்லவனாய் இருக்கும் நடிகர் ரஜினிகாந்தின் திரைப்பயணம் எங்கே தொடங்கியது, எப்போது நிகழ்ந்தது ரஜினிகாந்தின் பரிணாமங்கள்? வாருங்கள் இக்கட்டுரையில் காண்போம்.

    கே.பாலச்சந்தர் இயக்கத்தில் 1975-ம் ஆண்டு சிவாஜி ராவ் என்பவர் ‘ஆபூர்வ ராகங்கள்’ திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். அந்த அபூர்வ ராகங்கள்’ திரைப்படத்தில் கதவைத் திறப்பதுப்போல், ஒரு காட்சி அமைக்கப்பட்டிருக்கும். அந்தக் காட்சி திரைப்படத்தில் வரும்போது இந்திய திரையுலகத்தை ஆள, ஒருத்தர் திரைத்துறை கதவைத் திறந்துக்கொண்டு வந்திருக்கிறார் என்று எவருக்கும் தெரியாது.

    கதவைத் திறந்துகொண்டு வந்தவருக்கு ரஜினிகாந்த் என்று பெயர் சூட்டப்பட்டது. அபூர்வ ராகங்களுக்குப் பிறகு, சில திரைப்படங்களில் நடித்தாலும், கே.பாலச்சந்தர் இயக்கத்தில் 1976-ம் ஆண்டு வெளியான மூன்று முடிச்சு திரைப்படத்தில் ரஜினிகாந்தின் நடிப்பு வெகுஜன மக்களையும், திரைத்துறையினரையும் மெய்சிலிர்க்க வைத்தது.

    பலரும் கொண்டாடிய நடிகர் ரஜினியின் சிகெரட் ஸ்டைல், மூன்று முடிச்சு திரைப்படத்தில்தான் முதல்முதலாக அரங்கேற்றப்பட்டது. எந்தக் கதாப்பாத்திரமாக இருந்தாலும், தனது ஸ்டைலை கதாப்பாத்திரத்தின் தகவமைப்பு சிதையா வண்ணம் புகுத்தக்கூடிய கெட்டிக்காரராக திகழ்ந்தார், நடிகர் ரஜினிகாந்த்.

    1977-ம் ஆண்டு வெளியான அவர்கள், கவிக்குயில், 16 வயதினிலே போன்ற திரைப்படங்களில் வில்லனாக நடித்து ரசிகர்களைப் பெரிதும் ஈர்த்தார், நடிகர் ரஜினிகாந்த். 16 வயதினிலே திரைப்படத்தில் ‘இது எப்படி இருக்கு’ என்று ரஜினிகாந்த்  பேசிய வசனம், 45 ஆண்டுகள் கழித்தும் இன்றளவும் பலராலும் பேசப்பட்டு வருகிறது.

    வில்லன் கதாபாத்திரத்திற்கு என்று திரைப்படச் சமூகம் வைத்திருந்த அத்தனை அளவுகோல்களுக்கும் கனக்கச்சிதமாக பொருந்திய ரஜினிகாந்த்தை, வில்லன் கதாப்பாத்திரமாகவே பாவிக்கத் தொடங்கியது, தமிழ்த் திரையுலகம். ஆனால், அந்த பாவித்தலை உடைத்தெறிந்து, கதாநாயகனாக ரஜினிகாந்த் நடித்து 1978-ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம்தான் பைரவி. ‘சூப்பர் ஸ்டார்’ என்று பட்டம் முதன்முதலில் பைரவி திரைப்படத்தின் போது தான் நடிகர் ரஜினிகாந்துக்கு வழங்கப்பட்டது.   

    பைரவி திரைப்படம் வெளியான அதே ஆண்டு வெளியான மற்றொரு திரைப்படம்தான், ‘முள்ளும் மலரும்’. இயக்குநர் மகேந்திரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில், காளி எனும் கதாப்பாத்திரத்தில் ரஜினிகாந்த் தனது நடிப்பின் காந்தத்தால் பெரிய ஈர்ப்பை நிகழ்த்தினார். 

    ‘கெட்ட பையன் சார் இந்த காளி’ இப்போதும் ரசிகர்களிடத்தில் பரவலாக உபயோகிக்கப்படும் ஒரு வசனமாக திகழ்கிறது. ரஜினிகாந்த் தன்னை மீண்டும் மீண்டும் சிறந்த நடிகனாக நிரூபனம் செய்துகொண்டே இருந்தார்.

    தனது கதாப்பாத்திரங்களினூடே பல வேறுபாடுகளைக் காண்பித்த ரஜினிகாந்த் 1978-ம் ஆண்டு இறுதியில் வெளிவந்த ப்ரியா திரைப்படத்தில், அதுவரை இல்லாத கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பார். ‘ஓ பிரியா’ என்று ரஜினிகாந்த சிங்கப்பூரில் பாடி உழல்வது இன்றளவும் பலருக்கும் விருப்பமான ஒன்றுதான். இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் ரஜினிகாந்த் தனது திரை வாழ்வில் மற்றொரு பரிணாமத்துக்கு சென்றார் என்றே கூற வேண்டும்.

    ஆம், புவனா ஒரு கேள்விக்குறி, ஆடு புலி ஆட்டம், ப்ரியா, ஆறிலிருந்து அறுபது வரை போன்ற திரைப்படங்கள் இருவர் கூட்டணியிலும் வெளியாகி நற்பெயரை மக்களிடம் ஈர்த்துக்கொண்டிருந்த வேளையில், ரஜினிகாந்தை கொண்டாட வைத்த திரைப்படம்தான் முரட்டுக்காளை. இத்திரைப்படத்தில் கிராமப்புற ஆக்‌ஷனில் ரஜினிகாந்த் காளையாக சீறிக்கொண்டிருக்க.. முரட்டுக்காளை மிகப்பெரிய வெற்றியைக் கண்டது. 

    இதைத்தொடர்ந்து, ரஜினிகாந்த் ஆக்‌ஷன் மற்றும் மசாலா கலந்த திரைப்படங்களுக்கு அதிக முக்கியத்துவம் தந்து நடிக்க ஆரம்பித்தார். ஆக்‌ஷன் மற்றும் மசாலா என்று ஒரே தலைப்பின் கீழ் கொண்டு வந்தாலும், அதிலும் வேறுபாடுகளை நிகழ்த்தியவாறே ரஜினிகாந்த் நடித்துக் கொண்டிருந்தார். 

    பில்லா, ஜானி, பொல்லாதவன், முரட்டுக்காளை, கழுகு போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தாலும், தில்லு முல்லு, போக்கிரி ராஜா போன்ற திரைப்படங்களில் நகைச்சுவையாகவும் நடித்திருப்பார். தில்லு முல்லு திரைப்படத்துக்கு திரையரங்குகள் சிரிப்பலையால் நிறைந்ததை, இப்போதும் பலர் சொல்லக் கேட்கலாம். 

    எண்பதுகளில் மட்டுமே கிட்டத்தட்ட ஐம்பது திரைப்படங்களில் நடித்தார் ரஜினிகாந்த். ஆக்‌ஷன், காதல், குடும்பம், நகைச்சுவை என தனது திரைப்படங்களில் பல அம்சங்களும் இருக்கும்படி பார்த்துக்கொண்டார். எண்பதுகளுக்குப் பிறகு, ரஜினிகாந்த் திரைப்படத்தில் நடிக்கும் வேகத்தை குறைத்துக்கொண்டார். அதாவது ஆண்டுக்கு இரு படம் ஒரு படம் என்ற அளவிலேயே நடித்தார். 

    ரஜினிகாந்தின் மாஸ் என்றவுடன் பலருக்கும் நினைவில் வரும் திரைப்படங்களில் முக்கியமானவற்றை தொண்ணூறுகளில் தான் ரஜினிகாந்த் தந்துள்ளார். தளபதி, அண்ணாமலை, எஜமான், உழைப்பாளி, பாட்ஷா, முத்து, அருணாச்சலம், படையப்பா என சூப்பர் டூப்பர் ஹிட் திரைப்படங்களை ரசிகர்களுக்குத் தந்தார்.

    இத்தகைய தொடர் வெற்றித் திரைப்படங்களை தந்துக்கொண்டிருந்த சமயத்தில்தான் 2002-ம் ஆண்டு பாபா திரைப்படத்தின் வாயிலாக பெரும் சருக்கலை ரஜினிகாந்த் சந்தித்தார். இத்திரைப்படத்திற்கு ரஜினிகாந்த் கதை எழுத, அக்கதையை சுரேஷ் கிருஷ்ணா இயக்கினார். ஆனால், பாபா திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு ரசிகர்களை கவரவில்லை. அதுமட்டுமல்லாது, பல இன்னல்களுக்கு பாபா திரைப்படம் வெளிவந்த சமயத்தில் ரஜினிகாந்த் உள்ளானார். திரையுலகத்தில் மட்டுமல்லாது பொதுமக்களில் சிலரும் ரஜினிகாந்தின் சினிமா வாழ்க்கை முடிந்துவிட்டது என்று பேச ஆரம்பித்தனர். 

    ஆனால், இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த ரஜினிகாந்த் பாபாவுக்குப் பிறகு அமைதியாக இருந்தபடியே மூன்று ஆண்டுகள் கழித்து ‘இது எப்படி இருக்கு’ என்ற 16 வயதினிலே பரட்டையின் வசனத்தை சந்திரமுகி திரைப்படத்தின் வாயிலாக  பேசினார்.

    ஒரு ஆண்டுக்கும் மேலாக தொடர்ந்து திரையரங்குகளில் சந்திரமுகி வெற்றிகரமாக ஓடியது. சந்திரமுகியின் வெற்றி,  ரஜினிகாந்தின் சினிமா வாழ்க்கை முடிந்துவிட்டது என்ற பேச்சுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது.

    சந்திரமுகிக்குப் பிறகு, சங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த திரைப்படம்தான் சிவாஜி. இத்திரைப்படம், மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்திய திரையுலகமே இத்திரைப்படத்தை கொண்டாடியது. இதற்கு மேல் ஒரு திரைப்படத்தை ரஜினிகாந்தால் தர முடியாது என்கிற கருத்து உருவெடுத்தது. 

    அப்படி உருவெடுத்த கருத்துகளை ஊதினால் பறந்துப் போகும் தூசிகள் போல, எந்திரன் திரைப்படத்தால் புறந்தள்ளினார் ரஜினிகாந்த். இயக்குநர் சங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த இத்திரைப்படத்தை இந்திய திரையுலகமே வியந்து பார்த்தனர். சிட்டி எனும் ரோபோவாகவும் ,வசீகரனாகவும் ரஜினிகாந்த் நடித்த விதம் பல்வேறு தரப்பு பார்வையாளர்களையும் கவர்ந்தது. 

    எந்திரனுக்குப் பிறகு, ரஜினிகாந்த் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால், அமெரிக்காவுக்கு சிகிச்சைக்காக சென்றார். அச்சமயத்தில், பலரும் ரஜினிகாந்தின் உடல்நிலை சரியாக வேண்டிக்கொண்டனர். பலர் கடவுள்களை வழிபட்டனர்.  ரஜினிகாந்தின் ரசிகர்கள் இச்சூழலில், மிகவும் மனதளவில் உடைந்துப் போயிருந்தனர் என்றே சொல்ல வேண்டும்.

    இப்படியான சூழலில்தான் ரஜினிகாந்த் உடல்நிலை தேறிவருகிறார் என்ற அறிவிப்பு வெளிவந்தது. இது அவரது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. 

    சிகிச்சைக்குப் பிறகு ரஜினிகாந்த நடித்த முதல் திரைப்படம் கோச்சடையான். எந்திரனுக்குப் பின்பு ஏறத்தாழ நான்கு வருடங்கள் கழித்து வெளியான திரைப்படம் இதுவாகும். Motion Capture முறையில் உருவான இத்திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. ஆனாலும், இத்திரைப்படத்தின் முயற்சிக்குப் பல்வேறு பாராட்டுகள் படக்குழுவுக்கு குவிந்தது. 

    அதே ஆண்டு வெளிவந்த ரஜினிகாந்தின் மற்றொரு திரைப்படம்தான், லிங்கா. கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் வெளிவந்த லிங்கா. படையப்பா, முத்துவைத் தொடர்ந்து ரஜினிகாந்தும் கே.எஸ்.ரவிகுமாரும் இணையும் திரைப்படம்,  4 ஆண்டுகளுக்கு பிறகு, இயல்பான பாணியில் ரஜினிகாந்த நடிக்கும் திரைப்படம், ஏ.ஆர்.ரகுமான் இசை என லிங்கா திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு என்பது உச்சத்தை அடைந்துகொண்டே சென்றது. 

    ஆனால், இந்த எதிர்பார்ப்பை லிங்கா திரைப்படம் பூர்த்தி செய்யாமல் போக, மீண்டும் ஒரு தோல்வி திரைப்படத்துக்கு சொந்தக்காரர் ஆனார் ரஜினிகாந்த். அதுமட்டுமல்லாமல், லிங்கா திரைப்படம் பல கேளிக்கைகளுக்கும் உள்ளானது. 

    தோல்வியில் இருந்து எழ, திரைத்துறையில் மீண்டும் ஓட ரஜினிக்கு கிடைத்த திரைப்படங்கள்தான் கபாலியும், காலாவும். பெரும்பான்மையான மக்களிடத்தில் இந்த இரு திரைப்படங்களும் நல்ல வரவேற்பை பெற்றது. இதனால், மீண்டும் ஒரு முறை தான் யாரென்பதை திரையுலகுக்கு நிரூபித்தார், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். 

    காலா வெளியான அதே வருடம் மற்றொரு திரைப்படத்துக்கு இந்திய திரை ரசிகர்கள் பெரிய எதிர்பார்ப்புடன் காத்திருந்த திரைப்படம்தான் 2.0. எந்திரனின் இரண்டாம் பாகமான இத்திரைப்படத்துக்கும் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. மேலும், 3டி முறையில் இத்திரைப்படம் தயாரானது கூடுதல் எதிர்பார்ப்புக்கு வித்திட்டது. இப்படியான சூழலில் கலவையான விமர்சனங்களுடன் 2.0. வசூலில் பல சாதனைகளை செய்தது. 

    தென்னிந்திய சினிமாவில் கருப்பு வெள்ளையில் ஆரம்பித்து, கலர், இயக்கம் கைப்பற்றல் (Motion Caption), 3டி என்ற திரை பரிணாமங்களில் வளம் வந்தவர் நடிகர் ரஜினிகாந்த் மட்டுமே.. ஆனால், ரஜினிகாந்த் ரசிகர்களுக்கும், பொதுவான திரைப்பிரியர்களுக்கும் எண்பதுகளில், தொண்ணூறுகளில் உள்ள ரஜினிகாந்தை காண வேண்டுமென்ற ஆவல் இருந்துகொண்டே இருந்தது. கபாலி, காலா வெற்றிப்படமாக அறியப்பட்டாலும், அவை இயல்பான ரஜினிகாந்த் திரைப்படமாக இல்லை. 

    இம்மாதிரியான சூழலில்தான், ரஜினிகாந்தின் ரசிகர் என்று தன்னை வெளிப்படையாக கூறிக்கொண்டு, பேட்ட எனும் அதிரடி திரைப்படத்தை கொடுத்தார் கார்த்திக் சுப்புராஜ். ரஜினிகாந்தை எவ்வாறு காண பெரும்பான்மை கூட்டம் காத்திருந்ததோ அந்த ரஜினியை பேட்ட திரைப்படம் அவர்களுக்கு தந்துவிட்டது. 

    இனி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஏறுமுகம் தான் என்று அவரது ரசிகர்கள் மட்டுமல்லாது திரைப்பிரியர்களும் முடிவுக்கு வர.. இல்லை அப்படி இல்லை என்பதைப் போல, தர்பார் மற்றும் அண்ணாத்த திரைப்படங்கள் அமைந்துவிட்டன. வணிக ரீதியாக சாதித்தாலும் இரு திரைப்படங்களுக்கும் மக்களிடையே போதிய வரவேற்பு இல்லாமல் போய்விட்டது. 

    தற்சமயம், திரைப்பட ரசிகர்கள் ரஜினிகாந்தின் அடுத்த திரைப்படமான ஜெயிலர் திரைப்படத்தை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள்.. இந்நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திரைத்துறையில் 47 ஆண்டுகளை பூர்த்தி செய்கிறார். 

    47 ஆண்டுகளாக ஒரு கலைஞன் ஒரு துறையை ஆட்டிப்படைப்பது என்பது வியப்புக்குரிய ஒன்றுதான்.. இப்போதும் ரஜினிகாந்தின் திரைப்படம் வெளியாகும் நாள் வெறும் நாளாக இருந்தாலும், அது திருநாளாக மாறுகிறது.

    இந்தியா மட்டுமல்ல, உலகெங்கிலும் பல நாடுகளில் இவரின் திரைப்படத்துக்காக காத்துக்கொண்டிருக்கிறார்கள். திரைப்பட வெளியீட்டு நாளை கொண்டாடுகிறார்கள். 

    ஆறிலிருந்து அறுபது வரை அல்ல மட்டுமல்ல, உயிர் துறக்கும் வரையிலும் ரஜினியை ரசித்துக்கொண்டிருக்கும் கூட்டம் இங்கே உள்ளது. ‘தலைவா..தலைவா..’ என்று ரசிகர்கள் அழைக்கும் விதத்திலேயே ரஜினிகாந்தின் மீது அவர்களுக்கு இருக்கும் அன்பை நம்மால் அறிய முடிகிறது. இந்த அன்பானது வற்றாத கங்கையாய் தொடர வாழ்த்துகள் சூப்பர்ஸ்டார்!

    தினவாசல் சார்பாக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!

     

    இன்னல்களால் உருவான…உருவாகும் விஜய்யின் சினிமா வாழ்க்கை – ஒரு பார்வை..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....