இந்திய ராணுவத்தில் 4 ஆண்டுகளுக்கு இளைஞர்களை ஒப்பந்த அடிப்படையில் சேர்ப்பதற்கு ‘அக்னிபத்’ என்ற புதிய திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த திட்டத்திற்கு வட மாநிலங்களில் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
போராட்டத்தை கட்டுப்படுத்த காவல்துறையினர் தடியடி நடத்தி வருகின்றனர். மேலும் அக்னிபத் திட்டத்தை எதிர்த்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றன. இந்த திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன.
அக்னிபத் திட்டம் என்றால் என்ன?
இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கடந்த ஜூன் 14ஆம் தேதியன்று அக்னிபத் திட்டம் குறித்து அறிவித்தார். இளைஞர்களை ராணுவத்தில் தற்காலிகமாக பணி நியமனம் செய்வதே இந்த அக்னிபத் திட்டம். அதாவது நான்கு ஆண்டுகளுக்கு மட்டும். பணிக்காலம் முடிந்ததும், அவர்களுக்கு சேவை நிதி தொகுப்பு வழங்கப்படும். 17.5 வயதில் இருந்து 21 வயதுக்குள் இருப்பவர்கள் இத்திட்டத்தின் கீழ் வேலை பெற முடியும். நான்கு ஆண்டுகளுக்கு பிறகு மதிப்பீடுகள் செய்யப்பட்டு 25 சதவீதம் பேர் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள்.
அக்னிபத் திட்டத்தை எதிர்த்து இளைஞர்கள் ஏன் போராடுகிறார்கள்?
அக்னிபத் திட்டத்துக்கு பிகார், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், ஹரியாணா, தெலங்கானா, தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தமிழ்நாட்டின் வேலூரில் ராணுவ பணியில் சேர ஆர்வம் மிகுந்த இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.பிகார், உத்தரப் பிரதேசம் மற்றும் தெலங்கானாவில் அக்னிபத் திட்டத்தை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் ரயில்களுக்கு தீ வைத்தனர். பல்வேறு இடங்களில் ரயில்வே அலுவலகங்கள் சூரையாடப்பட்டன.
இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் போராட்டக்காரர்கள், நான்கு ஆண்டுகள் பணியாற்றிய பிறகு, தங்களின் எதிர்காலம் பாதுகாப்பானதாக இருக்காது என்று கூறுகின்றனர்.மேலும் இந்த தற்காலிக திட்டத்தால் ராணுவத்தில் (நிரந்தர பணியில்) சேர வேண்டும் என்ற தங்களின் கனவு சிதைந்துவிடும் என்றும் இளைஞர்கள் கவலை தெரிவித்தனர்.
ஏற்கெனவே கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக முப்படைகளுக்கான ஆள்சேர்ப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் தங்களுடைய எதிர்காலம் கேள்விக்குறி ஆகியுள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, இந்த திட்டத்திற்கு எதிராக தொடர்ந்து விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். மேலும், அக்னிபத் திட்டத்தை விமர்சித்து பரம்வீர் சக்ரா விருது பெற்ற கேப்டன் பானா சிங், “நாட்டைக் காப்பாற்றுங்கள், அக்னிபத் திட்டம் நம்மை மோசமாக பாதிக்கும், இந்தியா ஒரு முக்கியமான கட்டத்தில் செல்கிறது. இளைஞர்களே நாட்டின் எதிர்காலம்” என்று டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவை பகிர்ந்துள்ள ராகுல் காந்தி, “ஒரு பக்கம் நாட்டின் பரம்வீரும், மறுபக்கம் பிரதமரின் பெருமையும் சர்வாதிகாரமும் உள்ளது. புதிய இந்தியாவில் நண்பர்கள் சொல்வது மட்டுமே கேட்கப்படுமே தவிர, நாட்டின் ஹீரோக்கள் சொல்வது அல்ல” என்று இந்தியில் குறிப்பிட்டுபதிவிட்டுள்ளார்.
‘பத்தல பத்தல’ கமல்ஹாசனின் இந்த ‘சாகாத’ முகம் உங்களுக்குத் தெரியுமா?