புதிய குடியரசுத் தலைவரைத் தேர்தெடுப்பதற்கான தேர்தல் நேற்று (ஜூலை 18) நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் மொத்தம் 99 சதவீத வாக்குகள் பதிவானது.
இந்தியாவின் தற்போதைய குடியரசுத் தலைவரான ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வரும் 24ம் தேதியுடன் முடிவடையும் நிலையில், புதிய குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நேற்று நடந்து முடிந்தது.
குடியரசுத் தலைவர் தேர்தலுக்காக, பாஜக கூட்டணி கட்சிகள் சார்பில் திரௌபதி முர்முவும், எதிர்க்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்ஹாவும் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர்.
தேர்தலுக்கான வாக்குப்பதிவு, நாடாளுமன்ற வளாகத்திலும், மாநில சட்டப்பேரவை வளாகத்திலும் நடைபெற்றது. நேற்று காலை 10 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு, மாலை 5 மணி வரை நடைபெற்றது.
மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் மற்றும் மாநில சட்டப்பேரவை உறுப்பினர்கள் என 4796 வாக்காளர்களில் 99 சதவீதத்தினர் வாக்களித்தனர். 10க்கும் மேற்பட்ட மாநிலங்கள் மற்றும் புதுச்சேரியிலும் 100 சதவீத வாக்குகள் பதிவானது. 8 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்கவில்லை என கூறப்படுகிறது.
தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளையும், இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டது. கொரோனா பரவல் தடுப்பு விதிகளைப் பின்பற்றி வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்குப்பதிவுக்கான பெட்டிகளும், வாக்கு சீட்டுகளும் தேர்தலுக்கு முன்னரே அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த தேர்தலில், எம்.பி க்களுக்கு பச்சை நிற வாக்கு சீட்டுகளும், எம்எல்ஏ-க்களுக்கு இளஞ்சிவப்பு நிற வாக்கு சீட்டுகளும் வழங்கப்பட்டது. தேர்தலின் போது ரகசியத்தை காக்கும் நோக்கில், வாக்காளர்களுக்கு அடர்நீல நிற மையைக் கொண்ட சிறப்பு பேனாவை தேர்தல் ஆணையம் வழங்கியது. வாக்காளர்கள் இந்த பேனாவைப் பயன்படுத்தி மட்டுமே வாக்களிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது.
பாஜக கூட்டணி கட்சிகளின் வேட்பாளாரான திரௌபதி முர்முவுக்கு பெரும்பாலான உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதால், அவரை எதிர்த்து போட்டியிடும் யஸ்வந்த் சின்ஹாவை விட முன்னிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. திரௌபதி முர்முவின் சொந்த ஊரான ஒடிசாவிலும், ஆளுநராக பதவி வகித்த ஜார்கண்டிலும், குஜராத், ஹரியானா போன்ற மாநிலங்களில் ஆதரவு உள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த ஜூலை 18 அன்று நடந்து முடிந்த குடியரசுத் தலைவருக்கான தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி ஜூலை மாதம் 21ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெறும் வேட்பாளர், ஜூலை 25ம் தேதி அன்று இந்தியாவின் 15வது குடியரசுத் தலைவராக பொறுப்பேற்பார்.
கள்ளக்குறிச்சி வன்முறை – ஆசிரியர்கள் கைது