புதுக்கோட்டையில் கஞ்சா புகைத்ததாக ஆயுதப்படை காவல்துறையினர் 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
புதுக்கோட்டை ஆயுதப்படை வளாகத்தில், மோப்ப நாய் பிரிவு அலுவலகம் இருக்கிறது. இந்த அலுவலகத்தில் உள்ள மோப்ப நாய்களை பராமரிக்க காவல்துறையினர் தனியாக பணி அமர்த்தப்பட்டு உள்ளனர்.
இந்நிலையில், அங்கு பணியாற்றி வந்த சேவியர் ஜான்சன், பழனிசாமி, அஸ்வித் ஆகிய 3 காவல்துறையினர் கஞ்சா புகைத்தாக கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து, 3 காவல்துறையினர் மீதும் காவல் கண்காணிப்பாளர் வந்திதாபாண்டே நடவடிக்கை எடுத்துள்ளார். அவர்கள் 3 பேரும் போதைப்பொருள் கடத்தலுக்கு உடந்தையாக இருந்ததாக கூறி, பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாக தகவல் வெளியானது.
இதுகுறித்து காவல்துறையினர் தரப்பில், ‘3 பேரும் பணியில் இருந்தபோது கஞ்சா புகைத்ததன் காரணமாகவே, பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்’ என்று தெரிவித்தனர்.
மோப்ப நாய் பயிற்சிக்காக வைக்கப்பட்டிருந்த கஞ்சாவை 3 பேரும் பயன்படுத்தியதாகவும், கஞ்சா இருப்பு குறைந்திருந்ததை காவல் கண்காணிப்பாளர் ஆய்வின்போது கண்டுபிடித்ததாகவும், அதன் அடிப்படையிலேயே 3 பேர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.