சேலம், மேட்டூர் அருகே தனியார் ஆம்னி பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்ததால் 8 பயணிகள் காயம் அடைந்தனர்.
கோவையிலிருந்து தனியார் ஆம்னி பேருந்து ஒன்று நேற்று இரவு 43 பயணிகளுடன் கர்நாடக மாநிலம் பெங்களூருவை நோக்கி சென்றுக் கொண்டிருந்தது. நள்ளிரவு 1 மணி அளவில் பேருந்து சேலம், மேட்டூரை அடுத்த சாம்பள்ளி அருகே சென்றுக்கொண்டிருந்தபோது பேருந்தின் முன் பக்கத்தில் இருந்து கரும்புகை வெளியேறியது.
இதனை அறிந்த பேருந்து ஓட்டுநர் பேருந்தை நிறுத்தி பயணிகளை உடனடியாக வெளியேறும்படி அறிவுறுத்தினார். இதைத்தொடர்ந்து பேருந்தில் இருந்த பயணிகள் வேகமாக கீழே இறங்க ஆரம்பித்தனர். இதனிடையே தீயானது பேருந்து முழுவதும் வேகமாக பரவியது. இதையடுத்து அருகில் இருந்தவர்கள் உடனடியாக கருமலை கூடல் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயினை அணைத்தனர்.
இந்தத் தீ விபத்தில் பேருந்து முழுவதும் எரிந்தது. இதில் ஆண்கள் 5 பேரும், பெண்கள் 3 பேரும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். காயமடைந்தவர்கள் மேட்டூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும், இந்தப் பேருந்து தீ விபத்து குறித்து கருமலை கூடல் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கனமழை பெய்ய வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம் சொன்ன செய்தி