கள்ளக்குறிச்சியில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் உயிரிழந்த மாணவி ஶ்ரீமதியின் உடலை மறுகூராய்வு செய்வது தொடர்பான நோட்டீஸ் அம்மாணவியின் வீட்டில் ஒட்டப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்த மாணவி ஶ்ரீமதி கடந்த 13-ம் தேதி பள்ளி விடுதி வளாகத்தில் மர்மமான முறையில் இறந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், உயிரிழந்த மாணவி ஶ்ரீமதியின் உடற்கூராய்வு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடத்தப்பட்டது. இந்த உடற்கூராய்வு அறிக்கை கடந்த 17-ம் தேதி வெளிவந்தது. அந்த அறிக்கையில், மாணவி ஶ்ரீமதி இறப்பதற்கு முன் அவரது உடலில் காயங்கள் மற்றும் மாணவியின் உடைகளில் ரத்த கறைகள் இருந்தது தெரியவந்துள்ளது.
மேலும், மாணவி ஶ்ரீமதியின் உடலில் பல இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளது. காயங்களால் ஏற்பட்ட அதிர்ச்சியினாலும் மற்றும் இரத்தம் உறைந்ததாலும் அவர் உயிரிழந்திருக்கலாம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், முக்கிய தரவுகளுக்காக உடலின் பிற உறுப்புகள் ரசாயன ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என உடற்கூராய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், மாணவி ஶ்ரீமதியின் தந்தை மீண்டும் உடற்கூராய்வு செய்ய வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு அவசர வழக்காக நேற்று காலை உயர்நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார் முன்னிலையில் ஏற்றுக்கொள்ளப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.
மாணவியின் தந்தை தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி சதீஷ்குமார், மாணவியின் உடலை மறுகூராய்வு செய்ய உத்தரவு பிறப்பித்தார்.
இந்நிலையில், மாணவியின் உடலை மறுகூராய்வு செய்யவும், உடலை மறுகூராய்வு செய்யும் போது தங்கள் தரப்பு மருத்துவரையும் அனுமதிக்க வேண்டும் என்று தந்தை ராமலிங்கம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீட்டு மனு அளிக்கப்பட்டது.
ஆனால், சென்னை உயர்நீதிமன்றம், தந்தையின் தரப்பில் மருத்துவரை அனுமதிக்க மறுத்துவிட்டது. எனவே, இந்த உத்தரவில் தங்களுக்கு நிறைவு இல்லை என்பதால் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப் போவதாக தெரிவித்தார். அதோடு, ஏற்கனவே பிறப்பித்த உத்தரவை நிறுத்தி வைக்க வேண்டும் என்று ராமலிங்கம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. ஏற்கனவே பிறப்பித்த உத்தரவை நிறுத்தி வைக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்தது.
அதன்பின்னர், மாணவி ஶ்ரீமதியின் உடலை மறுகூராய்வு செய்ய சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை நிறுத்திவைக்குமாறு தந்தை ராமலிங்கம் தரப்பு உச்சநீதிமன்றத்தில் முறையிட்டது.
இன்று விசாரணைக்கு வந்த இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் மாணவி ஶ்ரீமதியின் உடற்கூராய்வுக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது. மேலும், உடற்கூராய்வின் போது மாணவி ஶ்ரீமதியின் பெற்றோர்கள் இல்லாவிட்டாலும் உடற்கூராய்வை மேற்கொள்ளும்படி உச்சநீதிமன்றம் உத்தரவிடுட்டுள்ளது.
இந்நிலையில், மாணவி ஶ்ரீமதியின் உடலை மறுகூராய்வு செய்யும்போது, மாணவியின் பெற்றோர் வந்தால் அனுமதிக்க வேண்டும். அவர்கள் வரவில்லை என்றால் பகல் 1 மணிக்கு மறுகூராய்வு நடத்தவும் அனுமதி வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், மாணவி ஶ்ரீமதியின் உடல் மறுகூராய்வு நடத்தப்படுவது தொடர்பான நோட்டீஸ் மாணவியின் வீட்டில் ஒட்டப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
கள்ளக்குறிச்சி வன்முறையாளர்களை கண்டறிய சிறப்புப் புலனாய்வுக் குழு.