அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கோல்டு’ திரைப்படம் டிசம்பர் 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
நிவின் பாலி நடிப்பில் கடந்த 2015-ஆம் ஆண்டு வெளிவந்த மலையாள திரைப்படம், பிரேமம். மூன்று பருவங்களில் நிகழும் காதல் கதையை மிகவும் அழகாக பிரேமம் திரைப்படம் காட்சிப்படுத்தியது. மலையாளத்தில் வெளிவந்திருந்தாலும், இந்திய அளவில் பிரேமம் திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றது. குறிப்பாக தமிழகத்தில் தொடர்ந்து ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக பிரேமம் ஓடியது.
மாபெரும் வெற்றிப் பெற்ற பிரேமம் திரைப்படத்தை, இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கியிருந்தார். பிரேமம் திரைப்படத்திற்கு முன்பாக, இவரின் இயக்கத்தில் வெளிவந்த ‘நேரம்’ திரைப்படமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
இப்படியாக நேரம், பிரேமம் என இரு வெற்றித் திரைப்படங்களை இயக்கிய அல்ஃபோன்ஸ் புத்திரன் கிட்டத்தட்ட 7 வருடங்களுக்குப் பிறகு ‘கோல்டு’ என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். பிரித்விராஜ், நயன்தாரா ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘கோல்டு’, பல்வேறு காரணங்களால் ரிலீஸ் ஆகாமல் இருந்தது.
இந்நிலையில், ‘கோல்டு’ திரைப்படம் விரைவில் ரிலீஸாகவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. அதன்படி, டிசம்பர் 1-ஆம் தேதி தமிழ் மற்றும் மலையாளத்தில் திரைப்படம் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், டிசம்பர் 30-ஆம் தேதி ஓடிடி தளத்தில் திரைப்படம் வெளியாகவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த அறிவிப்பால், ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். முன்னதாக, கோல்டு திரைப்படத்தின் டீசர் வெளிவந்து ரசிகர்களை கவர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
வாரிசு படக்குழுவுக்கு நோட்டீஸ் ; விலங்குகள் நலவாரியம் அதிரடி