10 ஆண்டுகளுக்கு ஒரு முறை, அடையாள சான்றிதழ்களை அளித்து புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்தியாவைப் பொறுத்தவரையில் ஆதார் அட்டை என்பது அத்தியாவசியமான ஒன்றாக விளங்கி வருகிறது. 2009-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த ஆதார் அட்டை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. அப்போதிலிருந்து, இப்போது வரை சுமார் 130 கோடி ஆதார் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. ஒரு தனிப்பட்ட நபரின் பெரும்பாலான தகவல்களை இந்த ஆதார் அட்டை தன்னுள் வைத்துள்ளது.
ஆதலால், அவ்வபோது ஆதார் அட்டைக்கான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கி, அதனை மத்திய அரசு வெளியிட்டு வருவது வழக்கமாகியுள்ளது. அந்த வகையில் தற்போது ஆதார் கார்டு தொடர்பாக புது அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
அதன்படி, ஆதார் அட்டை வைத்திருப்போர், அதனை பதிவு செய்த நாளிலிருந்து சரியாக 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை, அடையாள சான்றிதழ்களை அளித்து புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
ஆதார் அட்டையில் மோசடிகள் செய்யப்படுவதைத் தடுக்கும் வகையில், ஆதார் அட்டை பெறும்போது அளித்த அடையாள சான்றிதழ்களை 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை அளித்து புதுப்பித்துக் கொள்வதன் மூலம், ஆதார் அட்டையின் உண்மைத் தன்மை உறுதி செய்யப்படும் என்று மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதுப்பித்தலை, https://myaadhaar.uidai.gov.in/ இணையதளம் அல்லது அருகில் உள்ள ஆதார் மையங்களுக்குச் சென்று செய்துக்கொள்ளலாம் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: வக்ஃபு போர்டு வாரியத்திற்கு சொந்தமான சொத்துக்களை மீட்டு தர வேண்டும்: தேசிய சிறுபான்மையினர் ஆணையம் வேண்டுகோள்..