கனமழை காரணமாக கோவை வால்பாறை தாலுகாவில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பின்படி, நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களின் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக் கூடும். திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இதனிடையே, தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக வால்பாறை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அதிக பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது. ஆங்காங்கே, தடுப்புச் சுவர்கள் இடிந்து விழுகிறது, மண்சரிவும் ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில், கோவை மாவட்டம் வால்பாறையில் கனமழை பெய்து வருவதால், வால்பாறையில் உள்ள பள்ளிகளுக்கு, இன்று ஒருநாள் மட்டும் விடுமுறை அளித்து கோவை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.