‘திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் இளங்கோவன் வெற்றிக்கு உதவுவோம்’ என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினரான திருமகன் ஈ.வெ.ரா உயிரிழந்ததைத் தொடர்ந்து, இந்தத் தொகுதி காலியானதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, கடந்த 18 ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியானது.
முன்னதாக காங்கிரஸ் முன்னாள் தலைவரும் மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தியின் நடைபயணத்தில் கடந்த டிசம்பர் மாதம் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கலந்துகொண்டு ராகுல் காந்திக்கு ஆதரவு தெரிவித்தார்.
இதனிடையே, ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருக்கும் காங்கிரஸ் கட்சியின் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு மநீம ஆதரவளிக்கும் என்ற கருத்து நிலவி வந்தது.
இந்நிலையில் இன்று காலை மக்கள் நீதி மய்யத்தின் அவசர நிர்வாகக் குழு-செயற்குழு கூட்டம் சென்னை ஆழ்வார்பேட்டையில் நடைபெற்றது.
இந்த அவசர கூட்டத்திற்கு பிறகு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் இளங்கோவன் வெற்றிக்கு உதவுவோம் என தெரிவித்தார். மேலும் காங்கிரஸ் கட்சிக்கு நிபந்தனையற்ற ஆதரவை அளிப்பதாகவும் தனது நண்பரும் பெரியாரின் பேரனுமான இளங்கோவனை ஆதரிப்பதாகவும் தெரிவித்தார்.
அதோடு, மக்கள் நீதி மய்யம் சார்பில் தேர்தல் பொறுப்பாளர் நியமிக்கப்பட்டிருப்பதாகவும் நாடாளுமன்ற தேர்தலுக்கி இன்னும் ஓராண்டு இருக்கும் நிலையில், தற்போது கூட்டணி குறித்து சொல்ல முடியாது எனவும் கமல்ஹாசன் குறிப்பிட்டார்.
வளர்ப்பு நாயால் உரிமையாளருக்கு நேர்ந்த கதி; அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி!