கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் தாளாளர், செயலாளர் உள்பட 5 பேருக்கு ஆகஸ்ட் 1-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பயின்று வந்த மாணவி ஶ்ரீமதி கடந்த 13-ம் தேதி பள்ளி வளாகத்தில் மர்மமான முறையில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
பள்ளித்தரப்பில், மாணவி ஸ்ரீமதி தற்கொலை செய்துகொண்டார் என தெரிவிக்கப்பட்டது. ஆனால், உயிரிழந்த மாணவி ஸ்ரீமதியின் தாயார், தமது மகள் தற்கொலை செய்துகொள்ளவில்லை. கொலைசெய்யப்பட்டிருக்கலாம் என்று காணொளி ஒன்றில் தெரிவித்தார். இதுகுறித்து காவல்நிலையத்தில் ஸ்ரீமதி பெற்றோர் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இதையடுத்து, மாணவி ஸ்ரீமதி உயிரிந்த விவகாரம் தொடர்பாக, மாணவி பயின்ற சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் தாளாளர், செயலாளர், மற்றும் முதல்வர் ஆகியோர் காவல்துறையால் கைதுசெய்யப்பட்டனர். மேலும், நேற்று (ஜூலை 18) இந்த வழக்கு தொடர்பாக இரண்டு ஆசிரியைகளையும் காவல்துறையினர் கைதுசெய்தனர்.
இதுவரை கைதுசெய்யப்பட்ட 5 பேருக்கும் ஆகஸ்ட் 1-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இவர்கள் 5 பேரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
கள்ளக்குறிச்சி வன்முறை தொடர்பாக சமூக வலைதளங்களில் பதிவு- 4 பேர் கைது