முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவுச் சின்னம் தொடர்பாக கருத்து தெரிவித்த சீமானுக்கு அமைச்சர் சேகர்பாபு பதில் கருத்து தெரிவித்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் எழுத்தாற்றலை நினைவுகூரும் வகையில், மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தின் பின்புறம், வங்கக்கடலில் பேனா வடிவ நினைவுச்சின்னம் ரூ.81 கோடியில் அமைக்க தமிழக அரசு முயற்சி எடுத்துள்ளது.
இதைத்தொடர்ந்து, நேற்று தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில், பொதுமக்கள் கருத்துக்கேட்பு கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் பேசிய சீமான் ஒரு கட்டத்தில் ‘கடலுக்குள் பேனாவை வைத்தால், ஒரு நாள் வந்து நான் உடைப்பேன்’ என்று தெரிவித்தார். இவரின் இந்த கருத்து அரசியல் வட்டாரத்தில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், சென்னை புரசைவாக்கத்தில் அமைந்துள்ள அருள்மிகு கங்காதரேசுவர் திருக்கோயிலில் இந்து அறநிலை துறையின் சார்பில் ராஜகோபுரம் உட்பட பல சீரமைத்தல் திருப்பணிகளை தொடங்கி வைத்த அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவரிடம் சீமான் கருத்து குறித்து கேட்கப்பட்டது. அதற்கு, ‘ சீமான் கலைஞரின் பேனா சிலையை உடைக்கும் வரை எங்கள் கைகள் பூப்பறித்துக் கொண்டிருக்குமா?. எல்லாருக்கும் கை இருக்கு.. இந்த பதிலே அவருக்கு போதும்!’ என்று சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
நடுரோட்டில் பார்ட் பார்ட்டாக கழண்ட எலக்ட்ரிக் பைக்; வைரலாகும் பதிவு!