தமிழ்நாடு முன்னாள் அமைச்சர் கக்கனின் மகன் பாக்கியநாதன் (79) உடல் நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், சிகிச்சை செலவை அரசே ஏற்கும் என அறிவித்துள்ளது.
சுதந்திரத்துக்குப் பிறகான தமிழகத்தின் அரசியல் வரலாற்றில் எவராலும் மறக்க முடியாத ஒரு பெயர்தான் கக்கன். அப்பழுக்கற்ற அரசியல் செய்தவரும், எளிமையாகவும், நேர்மையாகவும் இருந்த அமைச்சர் ஆவார். இவர் வெறுமனே அமைச்சர் மட்டுமல்லாது, இவர் ஓர் விடுதலைப் போராட்ட வீரர்⸴ இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் என பன்முகத் தன்மையை கொண்டவராக திகழ்ந்தார். இவர் காமராஜர் அமைச்சரவையில் பொதுப் பணித் துறை, மின்சாரத் துறை, தாழ்த்தப்பட்டோர் நலத் துறை ஆகிய துறைகளின் அமைச்சராக இருந்தார். பின்னர் கக்கன் உடல்நிலை சரியில்லாமல் 1981-ம் ஆண்டு உயிரிழந்தார்.
இந்நிலையில், தற்போது கக்கன் மகன் பாக்கியநாதன் சிறுநீரகமும், இதயமும் பாதிக்கப்பட்டு சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சூழலில், முதல்வரின் காப்பீட்டு திட்ட அடையாள அட்டையும் பாக்கியநாதனுக்கு இல்லை. அந்த கார்டை பெற கக்கனின் பேரன் அதாவது பாக்கியநாதனின் மகன் முயற்சித்து வருகிறார். தனது குடும்பத்திற்கு தமிழக அரசு உதவ வேண்டும் என பாக்கியநாதனின் மனைவி சரோஜினிதேவி கோரிக்கை விடுத்துள்ளார். அது போல் கணவரின் மருத்துவ செலவையும் அரசே ஏற்கவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதையடுத்து, கக்கனின் மகன் பாக்கியநாதனின் உடல்நிலை குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கொண்டுச் செல்லப்பட்டது. இந்நிலையில், கக்கன் மகனை சிறப்பு வார்டிற்கு மாற்று மாறும், இதயத்திற்கு ஆஞ்சியோ உள்பட அனைத்து சிகிச்சைகளையும் இலவசமாகவும் தரமாகவும் அளிக்க உத்தரவிட்டுள்ளதாகவும், அவருக்கான சிகிச்சைக்கு ஆகும் செலவை தமிழக அரசு ஏற்பதாகவும் முதல்வர் தெரிவித்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளது.