இந்தியாவில் அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படையிலான விதிமுறைகளைப் பாதுகாக்க வேண்டுமென்றால், சமூக வலைதளங்களை ஒழுங்குப்படுத்தப்பட வேண்டும் என உச்ச நீதிமன்ற நீதிபதி ஜே.பி.பார்திவாலா தெரிவித்துள்ளார்.
லக்னோவின் டாக்டர் ராம் மனோகர் லோஹியா தேசிய சட்டப் பல்கலைக் கழகம், ஒடிசாவின் தேசிய சட்டப் பல்கலைக் கழகம், தேசிய சட்டப் பல்கலைக் கழகங்களுக்கான முன்னாள் மாணவர்களின் கூட்டமைப்பு உள்ளிட்டவை இணைந்து நடத்திய தேசிய கருத்தரங்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை தில்லியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், உச்சநீதிமன்ற நீதிபதி ஜே.பி.பார்திவாலா கலந்துகொண்டார்.
இதில் பேசிய அவர், நாட்டில் சட்டம் சார்ந்த விவகாரங்களை அரசியல் ஆக்குவதற்காகவே சமூக வலைதளங்களைப் பலர் பயன்படுத்தி வருகின்றனர் என்றார். மேலும், சமூக வலைதளங்கள் மற்றவர்கள் மீது குறைகூறுவதற்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஜே.பி.பார்திவாலா மேலும் கூறியதாவது:
’’ நாட்டில் சமூக வலைதளங்கள் முறையாக ஒழுங்குபடுத்தபட வேண்டும். அப்போதுதான் அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படையிலான விதிமுறைகளை முறையாக பாதுகாக்க முடியும். உச்சநீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவுகளுக்காக நீதிபதிகள் விமர்சிக்கப்படுவது, ஆபத்தான சூழலை உருவாக்கும். இது நீதிபதிகள் சட்டத்தின் அடிப்படையில் செயல்படுவதற்கு தடையாக அமையும்.
பெரும்பாலான மக்களின் விருப்பத்தின் அடிப்படையிலேயே நீதிமன்றம் தீர்ப்புகளை வழங்க முடியாது. சட்டத்தின் அடிப்படையில் மட்டுமே நீதிமன்றம் முடிவெடுக்க முடியும். அரைகுறை அறிவு கொண்டவர்களே சட்டத்தின் அடிப்படையிலான செயல்பாடுகளுக்குப் பெரும் சவாலாக உள்ளனர்.
ஆக்கப்புர்வ விமர்சனங்களை நீதிமன்றம் எப்போதும் வரவேற்கிறது. அதே வேளையில், நீதிபதிகள் மீதான தனிப்பட்ட தாக்குதல்கள் ஏற்புடையவை அல்ல. நீதிபதிகள் தீர்ப்பு மூலமாக மட்டுமே பேச வேண்டும். சமூக வலைதள விவாதங்களில் அவர்கள் எப்போதும் பங்கேற்கக் கூடாது. சமூகத்தின் துணையின்றி நீதித்துறை இயங்காது. ஆனால், சட்டத்தின் அடிப்படையிலான செயல்கள் என்றும் தவிர்க்க முடியாதவை ’’ என்று தன் உரையில் அவர் தெரிவித்தார்.
கடந்த மாதம் இஸ்லாமிய இறைத்தூதர் நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்தற்காக முன்னாள் பாஜக நிர்வாகி நுபுர் சர்மாவுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது. இவ்வழக்கு விசாரணையின் போது உச்சநீதிமன்ற நீதிபதி ஜே.பி.பார்வதிவாலா அவர்களும் அமர்வில் இடம்பெற்றிருந்தார்.
ஆதலால், நீதிபதி ஜே.பி.பார்வதிவாலா கூறிய கருத்துகள் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவையாக பார்க்கப்படுகிறது.