ஜே.இ.இ தேர்வு விண்ணப்பத்தில் 10 ஆம் வகுப்பு மதிப்பெண் குறிப்பிடுவதில் இருந்து தமிழக மாணவர்களுக்கு தேசிய தேர்வு முகமை விலக்கு அளித்துள்ளது.
மத்திய அரசின் உயர்கல்வி பொறியியல் படிப்புகளில் சேர ஜே.இ.இ. நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வு வருகிற புது வருடம் 2023 ஆம் ஆண்டு ஜனவரி 24 ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது.
இதில் பங்கேற்க விருப்பம் உள்ள மாணவர்கள் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பங்களை பூர்த்தி செய்து வருகின்றனர். இதற்கு வருகிற ஜனவரி மாதம் 12 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.
இந்நிலையில், 2020-2021 ஆம் கல்வியாண்டில் 10 ஆம் வகுப்பு படித்து முடித்த மாணவர்களுக்கு பொதுதேர்வு நடத்தப்படவில்லை. கொரோனா தொற்று காரணமாக அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக தற்போது நடக்கவிருக்கும் ஜே.இ.இ. நுழைவு தேர்வுக்கு மதிப்பெண்கள் மற்றும் தரவரிசையை பதிவிட முடியாத சூழ்நிலை உருவானது.
மேலும், இந்த விவகாரத்திற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்து இருந்தார்.
இதைத்தொடர்ந்து தமிழக அரசு, ஜே.இ.இ தேர்வு விண்ணப்பத்தில் 10 ஆம் வகுப்பு மதிப்பெண் குறிப்பிடுவதில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தேசிய தேர்வு முகமைக்கு கடிதம் எழுதியது.
இதையடுத்து, தற்போது தமிழக அரசின் கோரிக்கையை ஏற்ற தேசிய தேர்வு முகமை ஜே.இ.இ தேர்வு விண்ணப்பத்தில் 10 ஆம் வகுப்பு மதிப்பெண் குறிப்பிடுவதில் இருந்து தமிழக மாணவர்களுக்கு தேசிய தேர்வு முகமை விலக்கு அளிக்கப்படுவதாக அறிவித்துள்ளது.
ஆம்னி பேருந்துகளுக்கான கட்டணத்தை அரசே நிர்ணயிக்க வேண்டும் – ராமதாஸ் வலியுறுத்தல்