சர்வதேச கால்பந்து கூட்டமைப்பான ‘பிஃபா’ இந்திய கால்பந்து வீரர் சுனில் சேத்ரியை கௌரவப்படுத்தியுள்ளது.
கால்பந்து வீரர்கள் என்றாலே பலருக்கும் முதலில் நியாபகம் வருவது மெஸ்ஸி மற்றும் ரொனால்டோதான். இதைத்தாண்டியும் அண்டை நாட்டு வீரர்கள் பலர் நியாபகத்திற்கு வருவார்களே தவிர, அவ்வளவு எளிதில் இந்திய கால்பந்து வீரர்கள் பலர் மனதில் வருவதில்லை. இந்நிலையில், இந்திய கால்பந்து வீரர் குறித்து ‘பிஃபா’ தொகுப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
ஆம், இந்தியாவைச் சேர்ந்த கால்பந்து வீரரான சுனில் சேத்ரி குறித்துதான் ‘பிஃபா’ தொகுப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, பிஃபா தனது ட்விட்டர் பக்கத்தில், ‘உங்கள் அனைவருக்கும் ரொனால்டோ, மெஸ்சி குறித்து அனைத்தும் தெரியும். அதே சமயம் தற்போதுள்ள வீரர்களில் அதிக கோல் அடித்த மூன்றாவது வீரர் இந்தியாவின் சுனில் சேத்ரி குறித்தும் தெரிந்துகொள்ளலாம்’ என தெரிவித்துள்ளது.
அதன்படி, பிஃபா வெளியிட்டுள்ள தொகுப்பானது மூன்று பகுதிகளாக உள்ளது. முதல் பகுதி – சுனில் சேத்ரியின் தொடக்க கால வாழ்க்கை, இரண்டாம் பகுதி – சுனில் சேத்ரி நிகழ்த்திய சாதனைகள், மூன்றாம் பகுதி – சுனில் சேத்ரியின் உச்சபட்ச வெற்றிகள், கோப்பைகள் வென்ற தருணம் மற்றும் பல்வேறு சாதனைகள் உள்ளிட்டவை குறிப்பிடப்பட்டுள்ளது.
கிறிஸ்டியானோ ரொனால்டோ 117 கோல்களுடனும், அர்ஜென்டினாவின் லியனோ மெஸ்ஸி 90 கோல்களுடனும் முதல் மற்றும் இரண்டாம் இடங்களை பிடித்துள்ளனர். இதைத்தொடர்ந்து, சுனில் சேத்ரி 84 கோல்களுடன் மூன்றாவது இடத்தில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சனையே புலம்பவிட்ட 19 வயது இளைஞர் ! இது ‘மோசடி’ என புகார்…