டெங்கு, சிக்கன்குனியா நோயைத் தடுக்கும் பெண் கொசுக்களை கண்டுபிடித்துள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழக இயக்குநர் தெரிவித்துள்ளார்.
தென்கிழக்கு பருவ மழை தொடங்கியிருக்கும் நிலையில் நாட்டில் பல்வேறு பகுதிகளில் டெங்கு, சிக்கன்குனியா நோய்ப் பரவல் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழக விஞ்ஞானிகள் டெங்கு, சிக்கன்குனியா நோய்ப் பரவலை தடுப்பதற்காக பெண் கொசுக்களை தயார் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழக இயக்குநர் விஞ்ஞானி அஷ்வனி குமார் கூறியதாவது :
’’புதுவையில் இயங்கி வரும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் வெக்டார் கட்டுப்பாட்டு ஆராய்ச்சி மையத்தில் கடந்த 4 ஆண்டுகளாக டெங்கு, சிக்கன்குனியா நோய்ப் பரவலை தடுப்பதற்கான ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது.
இந்த ஆராய்ச்சியில், ‘வோல்பாச்சியா’ எனப் பெயரிடப்பட்டுள்ள புதிய வகை பெண் கொசுவுடன் ஆண் கொசுக்கள் இனப் பெருக்கத்தில் விடவுள்ளோம். இதன்மூலம் வைரஸ்கள் இல்லாத கொசுக்கள் உருவாகும். வோல்பாச்சியா பெண் கொசுக்களை கண்டுபிடிக்கும் பணி தற்போது நிறைவடைந்துள்ளது.
இந்த கொசுக்களை இன்னும் வெளிவிடவில்லை. மத்திய அரசு ஒப்புதல் அளித்தால் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் இந்த கொசுக்கள் வெளியிடப்படும்’’ என்று கூறியுள்ளார்.