இந்திய கிரிக்கெட் வீரர் சூர்யகுமார் யாதவ் சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் இருபது ஓவர் பேட்டிங் தரவரிசையில், இரண்டாவது இடத்திற்கு முன்னேறி உள்ளார்.
சூர்யகுமார் யாதவ் தற்போது, மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இந்திய அணியில் இடம்பெற்று விளையாடி வருகிறார். கடந்த ஆகஸ்ட் 2-ம் தேதி நடைபெற்ற போட்டியில் 31 வயதான சூர்யகுமார் யாதவ், 76 ரன்கள் எடுத்து இந்தியாவின் வெற்றிக்கு வித்திட்டார்.
முன்னதாக, இங்கிலாந்துக்கு எதிரான இருபது ஓவர் தொடரில் சதம் அடித்து பலரது பாராட்டுக்கும் உள்ளானார். இந்நிலையில், சர்வதேச கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள டி20 பேட்டிங் தரவரிசையில் சூர்யகுமார் யாதவ் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார்.
இதற்கு முன், சூர்யகுமார் யாதவ் இருபது ஓவர் பேட்டிங் தரவரிசையில் ஐந்தாவது இடம் பெற்றிருந்தார். இந்நிலையில், 816 புள்ளிகள் பெற்று மூன்று இடங்கள் முன்னேறி, தற்போது இரண்டாவது இடத்தை சூர்யகுமார் யாதவ் பெற்றிருக்கிறார்.
சர்வதேச இருபது ஓவர் பேட்டிங் தரவரிசையில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் முதலிடத்தில் உள்ளார். இவரைக் காட்டிலும், சூர்யகுமார் யாதவ் 2 புள்ளிகள் மட்டுமே பின்தங்கியுள்ளார்.
இந்நிலையில், மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக மேலும், இரண்டு இருபது ஓவர் போட்டிகள் நடைபெறவுள்ளது. அதிலும், சூர்யகுமார் யாதவ் சிறப்பாக செயல்படும் பட்சத்தில், சர்வதேச இருபது ஓவர் பேட்டிங் தரவரிசையில் முதல் இடத்திற்கு முன்னேறவும் வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
வெளிவந்த அட்டவணை; ஆசிய கிரிக்கெட் தொடரில் கர்ஜிக்குமா இந்திய அணி?