பத்தொன்பது வயதுக்கு உள்பட்ட மகளிருக்காக நடைபெற்ற முதல் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இங்கிலாந்தை வீழ்த்தி கோப்பையை வென்றது.
தென்னாப்பிரிக்காவில் பத்தொன்பது வயதுக்கு உட்பட்ட மகளிருக்கான இருபது ஓவர் உலகக் கோப்பைத் தொடர் கடந்த 14-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. இத்தொடரின் இறுதிப் போட்டியானது நேற்று தென்னாப்பிரிக்காவின் போட்செஃப்ஸ்ட்ரூம் நகரில் நடைபெற்றது. இப்போட்டியில் இந்திய அணியும், இங்கிலாந்து அணியும் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இந்திய அணி பந்துவீச்சிலும், ஃபீல்டிங்கிலும் சிறப்பாக செயல்பட அதனின் விளைவாக, இங்கிலாந்து அணி 17.1 ஓவர்களில் வெறுமனே 68 ரன்கள் மட்டும் எடுத்து, 10 விக்கெட்டுகளையும் இழந்தது.
இதைத்தொடர்ந்து, 69 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. இங்கிலாந்து அணி தனது பந்துவீச்சு மூலம் நெருக்கடி தந்தாலும், இந்திய அணி 14 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 69 ரன்கள் எடுத்து வெற்றிப்பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் முதல் முறையாக ஐசிசி போட்டியில் வெற்றிப்பெற்ற முதல் இந்திய மகளிர் அணி என்ற பெருமையை ஷஃபாலி வர்மா தலைமையிலான இந்திய மகளிர் அணி பெற்றுள்ளது.
A special message from Lucknow for India’s ICC Under-19 Women’s T20 World Cup-winning team 🙌 🙌#TeamIndia | #U19T20WorldCup pic.twitter.com/g804UTh3WB
— BCCI (@BCCI) January 29, 2023
மேலும், இந்திய மகளிர் அணியின் இந்த வெற்றிக்கு பல தரப்புகளில் இருந்தும் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது. அந்த வகையில், இந்திய ஆடவர் அணி கிரிக்கெட் வீரர்கள் வாழ்த்து தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நியூசிலாந்துக்கு எதிரான வெற்றி; விமர்சனங்களுக்கு உள்ளாகும் இந்திய அணி!