இலங்கைக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி அபார வெற்றிப்பெற்றுள்ளது.
இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இந்தச் சுற்றுப்பயணத்தில் மூன்று இருபது ஓவர் போட்டிகள் கொண்ட தொடரிலும், மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரிலும் இலங்கை அணி விளையாடி வருகிறது.
இதில் ஹார்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி 2-1 என்ற கணக்கில் இருபது ஓவர் தொடரைக் கைப்பற்றியது. இதைத்தொடர்ந்து ஒருநாள் தொடர் தொடங்கியது. இதில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி களமிறங்கியது. கடந்த 10-ஆம் தேதி நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியிலும், கடந்த 12-ஆம் தேதி நடைபெற்ற இரண்டாம் ஒருநாள் போட்டியிலும் இந்திய அணி வென்று தொடரைக் கைப்பற்றியது.
இந்நிலையில், ஒருநாள் தொடரின் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இதைத்தொடர்ந்து, இந்திய அணியின் சார்பில் களமிறங்கிய ரோஹித் சர்மா 42 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். தொடர்ந்து சுப்மன் கில் 116 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பின்னர் அதிரடியாக விளையாடிய விராட் கோலி 85 பந்துகளில் சதத்தினை நிறைவு செய்தார். ஏ.எல்.ராகுல் 7 ரன்களும், ஷ்ரேயாஸ் ஐயர் 38 ரன்களும், சூர்யகுமார் 4 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். மொத்தத்தில், இந்திய அணி 50 ஓவர் முடிவில் 390 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக விராட் கோலி 166* ரன்களை அடித்து அவுட் ஆகாமல் களத்தில் இருந்தார்.
அதன்பின், 391 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற கடினமான இலக்கை எதிர்த்து இலங்கையின் துவக்க ஆட்டக்காரர்களாக அவிஷ்கா ஃபெர்னாண்டோ, நுவானிடோ ஃபெர்னாண்டோ ஆகியோர் களமிறங்கினர். ஆனால், இருவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அதன்பின், அடுத்தடுத்த பேட்ஸ்மேன்களும் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர்.
இறுதியில் 22 ஓவர்கள் முடிவில் 73 ரன்களை மட்டுமே எடுத்து 317 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது. இந்த தோல்வியின் மூலம் இலங்கை அணி வொயிட் வாஷ் ஆனது.
அடுத்த திரைப்படத்தின் பெயரை அறிவித்த பார்த்திபன்