இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாட இருந்த பயிற்சி ஆட்டம் மழை காரணமாக இன்று கைவிடப்பட்டுள்ளது.
இருபது ஓவர் உலகக் கோப்பை தொடரின் தீவிரம் கொஞ்சம் கொஞ்சமாக உச்ச நிலையை அடைந்து வருகிறது. 2022-ம் ஆண்டுக்கான இருபது ஓவர் உலகக் கோப்பைப் போட்டி ஆஸ்திரேலியாவில் கடந்த 16-ம் தேதி தொடங்கியது. இந்த உலகக் கோப்பைப் போட்டியானது நவம்பர் 13 வரை நடைபெறுகிறது.
இந்த இருபது ஓவர் உலகக் கோப்பை போட்டி அடிலெய்ட், பிரிஸ்பேன், கீலாங், ஹோபர்ட், மெல்போர்ன், பெர்த், சிட்னி உள்ளிட்ட நகரங்களில் மொத்தமாக 45 ஆட்டங்கள் நடைபெறவுள்ளன.
மேலும், நவம்பர் 9,10 தேதிகளில் அரையிறுதி ஆட்டங்கள் சிட்னி, அடிலெய்டில் நடைபெறவுள்ளன. இறுதிச்சுற்று நவம்பர் 13-ம் தேதி மெல்போர்ன் மைதானத்தில் நடைபெறுகிறது.
இந்த உலகக்கோப்பையில் இந்திய அணி தனது முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது. இரு அணிகளும் மோதும் இந்த போட்டி வரும் அக்டோபர் 23-ம் தேதி நடைபெற உள்ளது.
இந்நிலையில், இருபது ஓவர் உலகக் கோப்பைப் போட்டிக்காக பிரிஸ்பேனில் பயிற்சி ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது. முன்னதாக நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை 6 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இந்திய அணி. இதைத்தொடர்ந்து, பிரிஸ்பேனில் 2-வது பயிற்சி ஆட்டத்தில் நியூசிலாந்துடன் இன்று மோத இருந்தது. ஆனால், மழை காரணமாக இன்றைய பயிற்சி ஆட்டம் கைவிடப்பட்டுள்ளது.
மேலும்,வரும் ஞாயிறன்று மெல்போர்னில் இந்தியா – ஆஸ்திரேலியா மோதும் ஆட்டமும் மழையால் பாதிக்கப்படும் எனத் தெரிகிறது. இதனால் ரசிகர்கள் கவலையில் உள்ளனர்.
இதையும் படிங்க: தீபாவளிக்கு மறுநாளே சூரிய கிரகணம்! எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிகள்..