இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டுக்கு மரியாதை கொடுக்க, உலக நாடுகளுக்கு இந்தியா அழைப்பு விடுத்துள்ளது.
ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கூட்ட பேச்சுவார்த்தை நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு, ‘ஒத்துழைப்பு மூலம் பாதுகாப்பை உறுதி செய்வோம்’ என்ற தலைப்பில் நடத்தப்பட்டது.
நேற்று நடந்த ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இந்தியாவுக்கான நிரந்தர உறுப்பினர் ருச்சிரா கம்போஜ் கூறியதாவது:
இறையாண்மை மீதான மரியாதையில் தான் உலக அமைதி இருக்கிறது. பொது பாதுகாப்புக்கு இடையூறு விளைவிக்கும் வகையில், படைகளைப் பயன்படுத்தி ஒரு நாட்டின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தக்கூடாது. ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் அமைப்பில் சில சீரமைப்புகள் செய்ய வேண்டும். இல்லையெனில் ஐ.நாவின் உரிமைகளுக்கே சிக்கல் ஏற்படும்.
இறையாண்மை பிராந்திய ஒருமைப்பாட்டுக்கு பரஸ்பரம் மரியாதை கொடுங்கள் என உலக நாடுகளைக் கேட்டுக்கொள்கிறோம். பொது பாதுகாப்பு என்பது உலக நாடுகள் அனைத்தும் தீவிரவாதத்துக்கு எதிராக ஒன்றிணைந்தால் மட்டுமே சாத்தியமாகும்.
சர்வதேச சர்ச்சைகளுக்கு அமைதிப் பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காணப்பட வேண்டும். அதுபோலவே எல்லைப் பிரச்சினைகளுக்கு, நாடுகள் தங்களுக்கு இடையே ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தங்களை மதிக்க வேண்டும். பல தரப்பு ஒப்பந்தமாக இருந்தாலும், இரு தரப்பு ஒப்பந்தமாக இருந்தாலும் அதனை மதித்து நடக்க வேண்டும்.
தன்னிச்சையாக ஒரு தரப்பு மட்டுமே அந்த ஒப்பந்தத்தை மீறும் வகையில் நடந்துகொள்வது எந்த விதத்திலும் சரியானது அல்ல.
ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் வளரும் நாடுகளுக்கு இன்னும் அதிகமான பிரதிநிதித்துவம் கொடுக்க வேண்டும். ஜனநாயகம் மிக்க அமைப்பாக ஐ.நாவை மாற்ற வேண்டும். ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில், ஆப்பிரிக்க நாடுகளுக்கும் நிரந்தர பிரதிநிதித்துவம் கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தனது உரையில் தெரிவித்துள்ளார்.