கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நெல் உற்பத்தி மற்றும் நெல் சாகுபடிப் பரப்பில் தமிழகம் சாதனைப் படைத்துள்ளது.
தமிழகத்தில் நெல் சாகுபடிப் பரப்பையும், நெல் உற்பத்தியையும் ஆண்டுதோறும் உயர்த்துவதற்கு தமிழக அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறது. பயிர் கடன், காப்பீட்டு வசதி, குறைந்த விலையில் உரம் வழங்குதல் போன்ற நடவடிக்கைகளின் மூலம் தமிழக அரசு விவசாயிகளுக்கு உதவி வருகிறது.
மேலும், பாசன வசதிக்காக, ஜூன் மாதத்தில் திறக்கப்படும் மேட்டூர் அணையை இந்த ஆண்டு முன்னதாகவே தமிழக முதல்வர் திரு மு.க ஸ்டாலின் திறந்து வைத்தார். இது மட்டுமின்றி தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் போதுமான மழை பெய்து வருவதால், கடந்த சில ஆண்டுகளாக டெல்டா மாவட்ட விவசாயிகள் சம்பா, குருவை சாகுபடியில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இந்த காரணமாக, தமிழகத்தில் நெல் சாகுபடிப்பரப்பும், நெல் உற்பத்தியும் இந்த ஆண்டு அதிகரித்துள்ளது. தமிழக அரசு வெளியிட்ட புள்ளிவிவரங்கள் படி, கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவாக, அதிக அளவு சாகுபடிப்பரப்பும், நெல் உற்பத்தியும் அதிகரித்துள்ளது.
கடந்த 2000-01ம் ஆண்டில் சாகுபடிப்பரப்பு அதிகபட்சமாக 20.80 லட்சம் ஹெக்டராகவும், நெல் உற்பத்தி 1.11 லட்சம் டன்னாகவும் இருந்தது. இந்த அளவுகளானது 20 ஆண்டுகள் கழித்து 2021-2022ம் ஆண்டில் சாகுபடிப் பரப்பு 22.05 லட்சம் ஹெக்டராகவும், நெல் உற்பத்தி 1.22 லட்சம் டன்னாகவும் அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டு (2020-2021) சாகுபடிப்பரப்பு 20.36 லட்சம் ஹெக்டராகவும், நெல் உற்பத்தி 1.04 லட்சம் டன்னாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
உரிய காலத்துக்கு முன்னதாகவே தண்ணீர் திறக்கப்பட்டது, ஆறுகள், வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டது உள்ளிட்ட காரணங்களே இந்த சாதனைக்கு கரணம் என வேளாண்மைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.